மன்னம்பிட்டி வாகன விபத்தில் கணவன், மனைவி உட்பட மூவர் பலி



பொலன்நறுவை – மட்டக்களப்பு பிரதான வீதியில் மன்னப்பிட்டி பாலத்திற்கு அருகில் இன்று காலை 6.30 அளவில் இடம்பெற்ற வாகன விபத்தில் மூன்று பேர் உயிரிழந்துள்ளனர்.

தனியார் பேருந்தும் முச்சக்கர வண்டியும் நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. விபத்தில் முச்சக்கர வண்டியில் பயணித்த மூன்று பேரே உயிரிழந்துள்ளதாக மன்னம்பிட்டி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அரலகங்வில அருணபுர பிரதேசத்தை 67 வயதான யு.டப்ளியூ.ஜீ.ரண்பண்டா, 62 வயதான அவரது மனைவி ஜீ.கே. நந்தவதி மற்றும் இவர்களின் உறவினரான டி.ஜீ.விமலா ரந்தெனிய என்ற 72 வயதான பெண்மணி ஆகியோரே சம்பவத்தில் உயிரிழந்துள்ளனர்.

இவர்கள் அருணபுர பிரதேசத்தில் இருந்து மாத்தளையில் உள்ள உறவினர்களின் வீட்டுக்கு செல்லும் வழியில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

இவர்கள் சென்ற முச்சக்கர வண்டியுடன் மோதிய தனியார் பேருந்து பொலன்நறுவை திசையில் இருந்து மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் ஊழியர்களை ஏற்றிச் சென்றுள்ளது.

விபத்து சம்பவத்தை அடுத்து பேருந்தின் சாரதியை தாம் கைது செய்துள்ளதாக மன்னப்பிட்டி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி அசேல சரத் குமார தெரிவித்துள்ளார்.

முச்சக்கர வண்டி மற்றுமொரு பேருந்தை முந்தி செல்ல முற்பட்ட போது, எதிரில் வந்த பேருந்துடன் நேருக்கு நேர் மோதியுள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.