`முஸ்லிம்கள் கருவுறாமல் இருக்கும் மருந்தை உணவில் கலக்கிறார்கள்' -சர்ச்சை பேச்சால் கைதான பி.சி.ஜார்ஜ்

இந்து மகா பரிஷத் அமைப்பின் சார்பில் திருவனந்தபுரத்தில் ‘அனந்தபுரி இந்து மகா சம்மேளனம்’ கடந்த சில நாள்களாக நடைபெற்று வருகிறது. இந்த மாநாட்டில் பிற மதங்களைச் சேர்ந்த சில நிர்வாகிகளையும் நிகழ்ச்சி ஏற்பாட்டளர்கள் பேச அழைத்திருந்தனர். அதில் கிறிஸ்தவ மதம் சார்பில் கேரள ஜனபக்‌ஷம் கட்சியை நடத்திவரும் முன்னாள் எம்.எல்.ஏ பி.சி.ஜார்ஜ் கலந்துகொண்டு பேசினார். அவர் முஸ்லிம்கள் பற்றி பேசிய கருத்துகள் சர்ச்சையைக் கிளப்பியிருக்கிறது. முன்னாள் எம்.எல்.ஏ பி.சி.ஜார்ஜ் இந்து மாநாட்டில் பேசுகையில், “கேரளத்தில் 1958-ல் கிறிஸ்தவர்கள் 25 சதவிகிதம் பேர் இருந்தனர். முஸ்லிம்கள் 14 சதவிகிதம் பேர் இருந்தனர். பட்டியல் இனத்தினர் 7 சதவிகிதம் பேர் இருந்தனர். 54 சதவிகிதம் இந்து மதத்தினர் இருந்தனர். ஆனால், இப்போது கிறிஸ்தவர்கள் 14 சதவிகிதமும், முஸ்லிம்கள் 32 சதவிகிதமும் இருக்கின்றனர். அதேபோல, பட்டியலினத்தவர் 9 சதவிகிதம் இருக்கின்றனர். இந்துக்கள் 45 சதவிகிதம்தான் இருக்கின்றனர். இந்துக்கள் 9 சதவிகிதம் குறைந்துள்ளனர்.

சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக கைது செய்யப்பட்ட பி.சி.ஜார்ஜ்

வியாபாரம் செய்யும் முஸ்லிம்கள் உணவில் வேண்டும் என்றே குழந்தை பிறக்காமல் இருப்பதற்கான மருந்தை கலக்கிறார்கள். முஸ்லிம்கள் அவர்களின் எண்ணிக்கையை அதிகரித்து, இந்த நாட்டை முஸ்லிம் நாடாக மாற்ற முயல்கிறார்கள். முஸ்லிம் மதகுருக்கள் உணவில் மூன்றுமுறை துப்பிய பிறகு அதை பரிமாறுகிறார்கள். முஸ்லிம் அல்லாதவர்களின் இடங்களில் அவர்கள் கடைகளை அமைத்து, முஸ்லிம் அல்லாதவர்களின் பணத்தை கவர்ந்து கொண்டுசெல்கின்றனர். இதை இந்துக்கள் உணர்ந்துகொள்ள வேண்டும்” எனப் பேசியிருந்தார்.

மேலும், யூசப் அலியின் லூலூ மால் இந்து வியாபாரிகள் அதிகம் உள்ள பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ளதாகவும், முஸ்லிம் வியாபாரிகள் அதிகம் உள்ள கோழிக்கோடு, மலப்புறம் மாவட்டங்களில் மால்களை அமைப்பதில்லை எனவும் பேசியிருந்தார். பி.சி.ஜார்ஜின் பேச்சுக்கு கேரளாவில் பலரும் கண்டனம் தெரிவித்தனர். மேலும் யூத் லீக் உள்ளிட்ட அமைப்புகள் பி.சி.ஜார்ஜ் மீது டி.ஜி.பி உள்ளிட்டவர்களிடம் புகார் அளித்தனர். இதையடுத்து திருவனந்தபுரம் போர்ட் போலீஸார் பி.சி.ஜார்ஜ் மீது வழக்கு பதிவு செய்தனர். பின்னர் ஈராற்றுப்பேட்டையில் உள்ள பி.சி.ஜார்ஜின் வீட்டுக்குச் சென்று போலீஸார் அவரைக் கைது செய்தனர். பின்னர் நீதிபதி முன் ஆஜர்படுத்தப்பட்ட பி.சி.ஜார்ஜூக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கப்பட்டது.

முன்னாள் எம்.எல்.ஏ பி.சி.ஜார்ஜ்

ஜாமீனில் வெளியே வந்த பி.சி.ஜார்ஜ் செய்தியாளர்களிடம், “எந்த காரணத்தாலும் சாட்சியை மிரட்டக்கூடாது என்ற நிபந்தனையுடன் எனக்கு கோர்ட் ஜாமீன் வழங்கியுள்ளது. பிரச்னைக்குரிய விஷயங்களில் ஈடுபடக்கூடாது எனவும் கூறியுள்ளது. நான் கூறிய விஷயங்களில் உறுதியாக இருக்கிறேன். தீவிரவாத முஸ்லிம்களுக்கான பினராயி விஜயனின் ரம்ஜான் பரிசுதான் எனது கைது நடவடிக்கை. நான் எனது கருத்தில் உறுதியாக இருக்கிறேன்” என்றார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.