திருப்பத்தூரில் விபத்தொன்றில் மூளைச்சாவு அடைந்த இளைஞரின் இதயம், தற்போது தானம் செய்யப்பட்டுள்ளது. வேலூரிலிருந்து சென்னைக்கு சாலை மார்க்கமாக இதயம் சென்னைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியை அடுத்த மதனஞ்சேரி பகுதியை சேர்ந்த ரவி- ரோஜி தம்பதியினரின் மகன் 21 வயது இளைஞர் தினகரன். இவர் கூலி வேலை செய்து வருகிறார். பணி முடித்துவிட்டு கடந்த 29-ம் தேதி இருசக்கர வாகனத்தில் குடியாத்தத்தில் இருந்து பேர்ணாம்பட் வழியாக வாணியம்பாடி செல்லும் போது எதிர்பாராத விதமாக ஏற்பட்ட இருசக்கர விபத்தில் படுகாயமடைந்தார் தினகரன். இதைத்தொடர்ந்து வேலூரில் உள்ள சிஎம்சி தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் இன்று அவர் மூளைச்சாவு அடைந்தார். இதனையடுத்து இவரது உறவினர்கள் அனுமதியின் பெயரில் இஞைளர் தினகரனின் இதயம், சிறுநீரகம் மற்றும் கல்லீரல் ஆகியவை ஆகியவை இன்று வேறொருவருக்கு தானம் செய்யப்பட்டுள்ளது.
அந்தவகையில் இதயம் சென்னையில் கிரின்வேஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனைக்கு இன்று மாலை 3 மணிக்கு வேலூரில் இருந்து சாலை மார்க்கமாக ஆம்புலென்ஸில் கொண்டு செல்லப்பட்டது. ஆம்புலென்ஸை வேல்முருகன் என்பவர் ஓட்டிச்சென்றுள்ளார். இதுபோன்று அவசர காலங்களில் உடல் உறுப்புகளை விரைவாக எடுத்துச் செல்வதில் நான்கு ஆண்டு அனுபவம் மிக்கவர்.
சுமார் 150 கிலோ மீட்டர் தொலைவு கொண்ட சென்னைக்கு பொதுவாக பயண நேரம் சுமார் 3 மணி நேரம் எடுக்கும். ஆனால் தற்போது 1 1/2 மணி நேரத்தில் சென்னை கொண்டு செல்லப்பட்டுள்ளது. இதற்காக வேலூரில் இருந்து ஆம்புலென்ஸ் செல்லும் பாதையில் ராணிப்பேட்டை மாவட்ட எல்லை வரை சுமார் 50 க்கும் மேற்பட்ட காவலர்கள் நிறுத்தப்பட்டு போக்குவரத்து சீர் செய்யப்பட்டு ஆம்புலென்ஸ் விரைவாக செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதுபோன்ற நிகழ்வு, `கிரின் காரிடார்’ என அழைக்கப்படும்.
பொதுவாக மருத்துவம் சொல்லும் வழிமுறைப்படி, மூளைச்சாவு அடைந்த ஒருவரது உடலில் இருந்து இதயம் எடுக்கப்பட்ட மூன்று மணி நேரத்திற்குள் அடுத்தவரின் உடலில் பொருத்தப்பட வேண்டும். இதற்காக பிரத்யேகமாக உள்ள ஐ சி யு ஆம்புலன்ஸ்கள் பயன்படுத்தப்படும். அதில் இரண்டு டெக்னீஷியன்கள் மற்றும் இரண்டு பாராமெடிக்கல் ஊழியர்கள் மருத்துவர்கள் இருப்பர். மூளைச்சாவு அடைந்த ஒருவரின் உடலிலிருந்து இதயத்தை எடுப்பதற்காக, அனுமதிக்கப்பட்ட மருத்துவமனைகளில் உள்ள இதய மாற்று அறுவை சிகிச்சை மருத்துவ குழு வேலை செய்யும். முதலில் அந்தக் குழு இதயம் மற்றொருவருக்கு பொருத்தும் தன்மையில் உள்ளதா, ஏதேனும் குறைபாடுகள் உள்ளதா என ஆராய்ந்து கூறும். பிறகே இதயம் தானமாக வழங்கப்படும்.
இதுவே தனியார் மருத்துவமனை என்றால், அவர்கள் உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்வதற்காக அரசிடமிருந்து அனுமதி பெற்றிருக்க வேண்டும் என்ற விதி உள்ளது. அப்படி அனுமதி பெற்ற மருத்துவமனைகளில் மட்டுமே உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்யப்படும்.
உடல் உறுப்புகள் தானமாக பெற விரும்புவோர் அரசு மருத்துவமனைகளிலும் மற்றும் அனுமதி பெற்ற தனியார் மருத்துவமனைகள் மூலமாகவும் “TRANSTAN.TN.GOV.IN” என்ற இணையதளம் மூலம் மருத்துவர் மூலமாக பதிவு செய்ய வேண்டும். இதன் மூலம் பதிவு செய்யப்படும். பதிவுகள் அனைத்தும் சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இயங்கும் உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை மையத்தில் சேகரிக்கப்பட்டு வருகிறது. காத்திரிக்கும் நோயாளிகள் பட்டியலின் அடிப்படையில் தேவைப்படுவோருக்கு அரசே உடல் உறுப்புகளை ஒதுக்கும் என்பது நடைமுறை.
இப்படி அனைத்து வழிமுறைகளையும் பெற்று, வேலூர் சி.எம்.சி.யிலிருந்து இளைஞரின் இதயம் இன்று அனுப்பிவைக்கப்பட்டிருந்தது. வெற்றிகரமாக அது தற்போது சென்னைக்கும் வந்தடைந்திருக்கிறது. சுமார் 1 மணி நேரம் 35 நிமிடங்களில் சென்னை வந்தடைந்திருக்கிறது இதயம்.
இடையே வாகன நெரிசலை தவிர்க்க போக்குவரத்து காவல்துறை ஏற்பாடு செய்திருந்ததால், சென்னை வானகரத்திலிருந்து ஆயிரம் விளக்குவரை போக்குவரத்தை சீராக இருந்தது போக்குவரத்து. ஆம்புலன்சில் வரும் இதயம் 40 சிக்னல்களை எளிதாக கடந்து வந்தது குறிப்பிடத்தக்கது.
சமீபத்திய செய்தி: உக்கிரமாகிறது கோடை வெயில் – தமிழகத்தில் 3 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை உயரும்Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM