திருப்பதி : திருப்பதியிலிருந்து, 15 கி.மீ., தொலைவில் உள்ள ஸ்ரீவாரிமெட்டு நடைபாதை மார்க்கம், வரும் 5 முதல், மீண்டும் பக்தர்களின் பயன்பாட்டிற்காக திறக்கப்பட உள்ளது.திருமலை திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு கூட்டம் திருமலையில் நேற்று நடந்தது. இது குறித்து அறங்காவலர் குழு தலைவர் சுப்பா ரெட்டி கூறியதாவது:
ஸ்ரீவாரிமெட்டு நடைபாதை மார்க்கம் கடந்த டிச., மாதம் பெய்த கனமழையில் கடுமையாக சேதமடைந்தது. அதை சீரமைக்கும் பணிகள் தற்போது நிறைவடைந்துள்ளன.வரும் 5ம் தேதி இந்த பாதையை பக்தர்கள் பயன்பாட்டிற்காக தேவஸ்தானம் மீண்டும் திறக்க உள்ளது. இதற்கு அறங்காவலர் குழு கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
விரைவில் இலவச நேரடி ஒதுக்கீடு சர்வ தரிசன டோக்கன்கள் நடைபாதையில் செல்லும் பக்தர்களுக்கு வழங்கப்படும். திருமலை ஏழுமலையானுக்கு 3.61 கோடி ரூபாய் செலவில் தங்க சிம்மாசனத்திற்கு புதிய தங்க முலாம் பூசப்பட உள்ளது.சென்னையைச் சேர்ந்த கர்ணாபதி என்பவர், ஏழுமலையானுக்கு நன்கொடையாக வழங்கிய புதுச்சேரியில் உள்ள, 58 லட்சம் ரூபாய் மதிப்புள்ள வீட்டை தானமாக பெற்றுக் கொள்ள தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது.
மஹாராஷ்டிரா மாநில அரசு நவி மும்பையில் 500 கோடி ரூபாய் மதிப்புள்ள நிலத்தை ஏழுமலையான் கோவில் கட்ட தேவஸ்தானத்திற்கு நன்கொடையாக அளித்துள்ளது. அங்கு ஏழுமலையான் கோவில் கட்டும் முழு செலவையும் ‘ரெமண்ட்ஸ்’ நிறுவனம் ஏற்றுள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.
Advertisement