குடியரசுத் தலைவர் தேர்தலில் பொது வேட்பாளரை நிறுத்த திட்டம்: பின்வாங்கிய 2 கட்சிகள்?.. எதிர்க்கட்சி தலைவர்கள் ஓரிரு நாட்களில் முக்கிய ஆலோசனை

டெல்லி: குடியரசுத் தலைவர் தேர்தலில் பொது வேட்பாளரை நிறுத்தும் எதிர்க்கட்சிகளின் முயற்சிக்கு பிஜு ஜனதாதளம், ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சிகள் ஆதரவளிக்க விரும்பவில்லை என தகவல் வெளியாகியுள்ளது. குடியரசுத் தலைவர் தேர்தல் வரும் ஜூலை மாதம் நடக்க உள்ள நிலையில் அந்த பதவிக்கு பாரதிய ஜனதா கட்சி யாரை களமிறக்கும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. அதே நேரத்தில் தங்கள் தரப்பில் பொது வேட்பாளரை நிறுத்த எதிர்க்கட்சிகளும் ஆலோசனை நடத்தி வருகின்றன. இது குறித்து எதிர்க்கட்சி தலைவர்கள் ஓரிரு நாட்களில் கூடி ஆலோசனை நடத்துவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் பொது வேட்பாளரை நிறுத்துவது தொடர்பாக பிஜு ஜனதாதளம் தலைவரும் ஒடிசா முதலமைச்சருமான நவீன் பட்நாயக்கை எதிர்க்கட்சி தலைவர்கள் சிலர் அணுகி உள்ளனர். குடியரசு தலைவர் தேர்தலில் பிஜு ஜனதாதளம் கட்சிக்கு 3.2% வாக்குகள் உள்ளதால் அதன் முடிவு முக்கியத்துவம் பெற்றுள்ளது. இதே போன்று 4% வாக்குகளை வைத்துள்ள ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியின் ஆதரவை கேட்டு ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியை சில தலைவர்கள் அணுகி உள்ளனர். இரு கட்சி தலைவர்களும் பிரதமர் மோடிக்கு எதிராக அரசியல் செய்ய விரும்பவில்லை என்று கூறப்படுகிறது. எனவே எதிர்க்கட்சி சார்பில் நிறுத்தப்படும் பொது வேட்பாளர் விவகாரத்தில் அவர்கள் பின்வாங்கிவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. குடியரசுத் தலைவர் தேர்தலில் பாரதிய ஜனதா மற்றும் கூட்டணி கட்சிகளுக்கு 48.9% வாக்குகளும், காங்கிரஸ் மற்றும் கூட்டணி கட்சிகளுக்கு 21.9% வாக்குகளும் உள்ளன. இதர கட்சிகளுக்கு 29.2% வாக்குகளும் உள்ளன. எந்த கூட்டணிக்கும் பெரும்பான்மை இல்லாத நிலையில் குடியரசுத் தலைவர் தேர்தலில் மாநில கட்சிகளின் கை ஓங்கியுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.