சென்னை:
தமிழ்நாட்டில் கோடை வெயில் சுட்டெரித்து வருகிறது. வேலூரில் 108 டிகிரி வெயில் பதிவாகி உள்ளது.
நாளை மறுநாள் (4ந்தேதி) கத்திரி வெயில் தொடங்க உள்ளது. கோடை வெப்பத்தின் தாக்கத்தை தாக்குப் பிடிக்க முடியாமல் மக்கள் தவிக்கின்றனர். இந்த கோடை வெயிலினால் உடலில் என்னென்ன அறிகுறி ஏற்படும். இதில் இருந்து தப்பிக்க என்னென்ன வழிமுறைகளை கடைபிடிக்கலாம் என்று தெலுங்கானா கவர்னர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் சில ஆலோசனைகளை டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
உடல் உஷ்ணத்திற்கான அறிகுறிகளாக அளவுக்கு அதிகமான வியர்வை ஏற்படும். நாக்கு மற்றும் தோல் வறட்சி ஏற்படும்.
மனக்குழப்பம், பேச்சு குளறுதல், தலை சுற்றல், மயக்கம், வலிப்பு நோய், நினைவிழந்து கோமா போன்ற ஆபத்தான நிலைக்கும் செல்லலாம்.
இதை தடுக்க மெல்லிய பருத்தி ஆடை மற்றும் கதர் ஆடைகளை அணியலாம்.
குறைந்தபட்சம் தினமும் 3 லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும். அதிக வெயிலில் வெளியில் செல்வதை தவிர்ப்பது நல்லது.
இணை நோய் இருப்பவர்கள், முதியவர்கள், குழந்தைகள் வெயிலில் செல்வதை முற்றிலும் தவிர்க்க வேண்டும்.