சென்னை அம்பத்தூர், டீச்சர்ஸ் காலனி, நேரு தெருவில் வசித்தவர் ஹரீஷ் பிரம்மா,(25). இவரின் மனைவி ரஷியா கத்துனா, (22) . உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த இந்தத் தம்பதியினருக்கு கடந்த ஓராண்டுக்கு முன்பு திருமணம் நடந்தது. சென்னை அம்பத்தூர் பகுதியில் ஹரீஸ் பிரம்மா, ஒரு கம்பெனியில் மிஷின் ஆபரேட்டராக வேலைப்பார்த்து வருகிறார். இந்த நிலையில், ரஷியா கத்துனா அடிக்கடி செல்போனில் பேசி வந்துள்ளார். அதை ஹரீஸ் பிரம்மா கண்டித்துள்ளார். ஆனாலும் ரஷியா கத்துனா, தொடர்ந்து போனில் பேசி வந்துள்ளார்.
இந்த நிலையில், கடந்த மாதம் ஏப்ரல், 29-ம் தேதி ரஷியா செல்போனில் பேசுவது தொடர்பாக கணவனுக்கும் மனைவிக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த ஹரீஸ் பிரம்மா, மனைவியை கட்டையால் தாக்கிவிட்டு வேலைக்குச் சென்றுவிட்டார். பின்னர் அவர் வீடு திரும்பியபோது ரஷியா மயக்க நிலையில் இருந்துள்ளார். உடனே அவரை அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற ஹரீஸ் பிரம்மா, கீழே விழுந்ததில் காயம் ஏற்பட்டதாக டாக்டரிடம் கூறியுள்ளார். முதலுதவி அளித்த டாக்டர்கள், மேல் சிகிச்சைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும்படி தெரிவித்தனர்.
இதையடுத்து ரஷியாவை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரைப் பரிசோதித்த டாக்டர்கள், ரஷியா இறந்து விட்டதாகக் தெரிவித்தனர். இதையடுத்து பிரேத பரிசோதனைக்காக ரஷியாவின் சடலம் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. பிரேத பரிசோதனை முடிந்து ரஷியாவின் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. மருத்துவமனையிலிருந்து அம்பத்தூர் போலீஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் போலீஸார், ரஷியாவின் கணவர் ஹரீஸ் பிரம்மாவிடம் விசாரித்தனர். விசாரணையில் மனைவி கீழே விழுந்து விட்டதாக ஹரீஸ் பிரம்மா கூறினார். இதையடுத்து சந்தேக மரணம் என்ற பிரிவின் கீழ் போலீஸார் வழக்கு பதிவு செய்தனர்.
இந்த நிலையில், 02.05.22-ம் தேதி ரஷியாவின் பிரேத பரிசோதனை ரிப்போர்ட் அம்பத்தூர் போலீஸாருக்கு கிடைத்தது. அதில் ரஷியாவை உருட்டுகட்டையால் தாக்கியதில் அவர் உயிரிழந்திருக்கிறார் என்று டாக்டர்கள் இறப்பிற்கான காரணத்தை குறிப்பிட்டிருந்தனர். இதையடுத்து போலீஸார், ஹரீஸ் பிரம்மாவிடம் விசாரணை நடத்தினர். அப்போது அவர் முன்னுக்குப் பின் முரணான தகவல்களைத் தெரிவித்திருக்கிறார். போலீஸாரின் தீவிர விசாரணைக்குப்பிறகு மனைவியைக் கொலை செய்ததை ஹரீஸ் பிரம்மா ஒப்புக்கொண்டார். இதையடுத்து இந்த வழக்கு கொலை வழக்காக மாற்றப்பட்டது. பின்னர் ஹரீஸ் பிரம்மாவைக் கைது செய்த போலீஸார் விசாரணைக்குப்பிறகு அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.