நடுவானில் புயலில் சிக்கிய ஸ்பைஸ்ஜெட் விமானம் – பயணிகள் காயம்

மும்பையிலிருந்து மேற்கு வங்க மாநிலம் துர்காப்பூர் நோக்கி சென்ற ஸ்பைஸ்ஜெட் விமானம், புயலில் சிக்கிக்கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. விமானம் பயங்கரமாக குலுங்கியதில், குறைந்தது 40 பயணிகள் காயமடைந்தனர். அதில், 12 பேர் படுகாயமடைந்ததாகவும், தற்போது அனைவரது உடல்நிலையும் சீராக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநர் ஜெனரல் அருண் குமார் கூறுகையில், இந்தச் சம்பவத்தில் கேபின் குழுவைச் சேர்ந்த ஒருவருடன் சேர்ந்து, 14 பயணிகள் காயமடைந்துள்ளனர். சிலருக்கு தலையில் காயம் ஏற்பட்டு தையல் போடப்பட்டுள்ளது. ஒரு பயணி முதுகுத்தண்டில் காயம் இருப்பதாக புகார் அளித்ததாக கூறினார்.

189 இருக்கைகள் கொண்ட போயிங் 737-800 விமானத்தில் பயணிகள் காயமடைந்த சம்பவத்தை ஸ்பைஸ்ஜெட் செய்தித் தொடர்பாளர் உறுதிப்படுத்தினார்.

அதிகாரிகள் கூற்றுப்படி, விமானம் தரையிறங்கும் போது, புயலில் சிக்கியுள்ளது. விமானம் குழுங்கியதால், பயணிகள் பதற்றம் அடைந்தனர். அப்போது, கேபின் பொருள்கள் பயணிகள் மீது விழுந்ததில் காயமடைந்தனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இச்சம்பவம் குறித்து அறிக்கை வெளியிட்ட ஸ்பைஸ்ஜெட், ஸ்பைஸ்ஜெட் போயிங் பி737 விமானம் மும்பையிலிருந்து துர்காபூருக்கு இயக்கப்படும் SG-945 விமானம் தரையிறங்கும் போது புயலில் சிக்கிக்கொண்டது. இதன் காரணமாக, பயணிகள் சிலர் காயமடைந்தனர். துர்காபூரில் விமானம் தரையிறக்கப்பட்டதும், பயணிகளுக்கு உடனடியாக சிகிச்சை அளிக்கப்பட்டது.

ஞாயிறு மாலை 5 மணிக்கு மும்பையில் இருந்து புறப்பட்ட விமானம், சுமார் 2 மணி நேரம் கழித்து துர்காபூரின் காசி நஸ்ருல் இஸ்லாம் விமான நிலையத்தை நெருங்கிக்கொண்டிருந்தபோது புயலில் சிக்கிக்கொண்டது. பின்னர், 7.15 மணியளவில் விமானம் பத்திரமாக தரையிறக்கப்பட்டது.

புயலில் விமானம் எப்படி சிக்கியது என்பது குறித்து ஆய்வு நடத்தப்படும் என்று விமான நிலைய ஆணைய அதிகாரி தெரிவித்தார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.