'மக்களிடம் நேரடியாக செல்ல வேண்டிய நேரம் இது' -புது கட்சி தொடங்குகிறார் பிரசாந்த் கிஷோர்?

”மக்களிடம் நேரடியாக செல்ல வேண்டிய நேரம் வந்துவிட்டது; நல்லாட்சி என்ற முழக்கத்துடன் மக்களை சந்திக்க உள்ளேன்” என்ற பிரசாந்த் கிஷோரின் ட்விட்டர் பதிவு அரசியல் கட்சித் தலைவர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தேர்தல் உத்தி ஆலோசகர் பிரசாந்த் கிஷோர் சமீபத்தில் காங்கிரஸ் கட்சியில் சேருவது குறித்து அக்கட்சித் தலைமையுடன் ஆலோசனை நடத்தி வந்தார். அதோடு 2024-ம் ஆண்டு நடக்கவிருக்கும் மக்களவைத் தேர்தலை எவ்வாறு எதிர்கொள்வது என்பது குறித்தும் ஆலோசித்து வந்தார். இதற்காக பிரசாந்த் கிஷோர் பல முறை சோனியா காந்தியைச் சந்தித்துப் பேசினார். இதனால் பிரசாந்த் கிஷோர் காங்கிரஸ் கட்சியில் இணைவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தன்னைவிட காங்கிரஸ் கட்சிக்கு இப்போது தலைமை தான் முக்கியம் என்றுக்கூறி அக்கட்சியில் இணையும் முடிவுக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.

image
இந்த நிலையில் பிரசாந்த் கிஷோர் இன்று வெளியிட்ட ட்விட்டர் பதிவை தொடர்ந்து, அவர் அரசியல் கட்சித் தொடங்குகிறாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. அந்தப் பதிவில், “ஜனநாயகத்தில் அர்த்தமுள்ள பங்கேற்பாளராக இருப்பதற்கும், மக்கள் சார்பான கொள்கையை வடிவமைக்க உதவுவதற்கும் எனது தேடலானது 10 வருட ரோலர் கோஸ்டர் சவாரிக்கு வழிவகுத்தது. நான் எனது பக்கத்தைத் திருப்புகிறேன். உண்மையான மாஸ்டர்களிடம் (மக்கள்) செல்ல வேண்டிய நேரம் இது; நல்லாட்சி என்ற முழக்கத்துடன் மக்கள் பிரச்சினைகளையும், மக்களின் நல்லாட்சிக்கான பாதையையும் நன்கு புரிந்து கொள்ள வேண்டிய நேரம் இது” என பதிவிட்டுள்ளார்.

My quest to be a meaningful participant in democracy & help shape pro-people policy led to a 10yr rollercoaster ride!

As I turn the page, time to go to the Real Masters, THE PEOPLE,to better understand the issues & the path to “जन सुराज”-Peoples Good Governance

शुरुआत #बिहार से
— Prashant Kishor (@PrashantKishor) May 2, 2022

இந்தப் பதிவானது பிரசாந்த் கிஷோர் அரசியல் கட்சி தொடங்குவதை உறுதிப்படுத்தும் வகையில் இருப்பதாக கருதப்படுகிறது. அவர் பீகார் மாநிலத்தை மையமாக வைத்து அரசியல் கட்சி தொடங்க வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 2024 நாடாளுமன்றத் தேர்தலுக்கு அனைத்துக் கட்சிகளுமே ஆயத்தமாகி வரும் இச்சூழலில் பிரசாந்த் கிஷோரின் இந்த பதிவு விவாதப் பொருளாகியுள்ளது.

இதையும் படிக்க: “அனுமான்போல இலங்கை நெருக்கடியை சுமக்க பிரதமர் மோடி தயார்”- அண்ணாமலை பேட்டிSource : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.