சேலம்: நிலக்கரி தட்டுப்பாட்டால், மேட்டூர் அனல் மின் நிலையத்தில் தினசரி 840 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.
மேட்டூர் அனல் மின் நிலையத்தில் பழைய உற்பத்திப் பிரிவில் தலா 210 மெகாவாட் மின் உற்பத்தித் திறன் கொண்ட 4 அலகுகள் மற்றும் புதிய உற்பத்திப் பிரிவில் 600 மெகாவாட் மின் உற்பத்தித் திறன் கொண்ட ஒரு அலகு உள்ளது. இதன் மூலம் தினசரி 1,440 மெகா வாட் மின் உற்பத்தி செய்யப்படுகிறது. இந்நிலையில், நிலக்கரி வரத்து குறைவு மற்றும் இருப்பு குறைவு காரணமாக தினசரி மின் உற்பத்தியில் 840 மெகாவாட் பாதிக்கப்பட்டுள்ளது.
தினசரி 23 டன் தேவை
இதுதொடர்பாக மின்வாரிய அதிகாரிகள் சிலர் கூறியதாவது: மேட்டூர் அனல் மின் நிலையத்தில் பழைய உற்பத்திப் பிரிவில் உள்ள 4 அலகுகளில் மின்சாரம் உற்பத்திக்கு தினசரி 12 முதல் 14 டன் வரை நிலக்கரி தேவைப்படும். இதேபோல, புதிய உற்பத்திப் பிரிவில் தினசரி 8 முதல் 9 டன் வரை நிலக்கரி தேவைப்படும். இதற்காக இங்கு குறைந்தது 15 நாள் முதல் 21 நாட்களுக்குத் தேவையான நிலக்கரி இருப்பு வைக்கப்பட்டிருக்கும்.
தற்போது, நிலக்கரி வரத்து குறைவாக இருப்பதால், இருப்பும் குறைந்தது. அதேநேரம் மின் தேவை அதிகமாக இருந்ததால், இருப்பில் உள்ள நிலக்கரி மூலம் அனைத்து அலகுகளிலும் கடந்த சில நாட்களாக மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு வந்ததால் நிலக்கரி இருப்பும் வெகுவாக குறைந்துவிட்டது.
600 மெ.வாட் மட்டுமே உற்பத்தி
எனவே, பழைய உற்பத்திப் பிரிவில் 3 அலகுகளில் மின்சாரம் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது. மேலும், ஒரு அலகில் 170 மெகாவாட் மட்டுமே மின் உற்பத்தி செய்யப்படுகிறது. இதேபோல, புதிய உற்பத்திப் பிரிவில் சுமார் 430 மெகாவாட் மட்டுமே மின் உற்பத்தி செய்யப்படுகிறது. எனவே, இரு பிரிவிலும் தினசரி சுமார் 600 மெகாவாட் மட்டுமே மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. நிலக்கரி தட்டுப்பாடு சீரடைந்ததும் முழு வீச்சில் மின் உற்பத்தி செய்யப்படும். இவ்வாறு அவர்கள் கூறினர்.