மே 31ஆம் தேதி வரை புதிய கட்டுப்பாடுகள்: பொது மக்கள் அதிர்ச்சி!

நாடு முழுவதும்
கொரோனா
தொற்று படிப்படியாக குறைந்து வந்த நிலையில், அனைத்து விதமான கட்டுப்பாடுகளையும் மாநில அரசுகள் கைவிடலாம் என்று அண்மையில் மத்திய அரசு பரிந்துரைத்திருந்தது. அதேசமயம், தொற்று அதிகரிக்கும் பட்சத்தில் கட்டுப்பாடுகளை விதித்துக் கொள்ளவும் மாநிலங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, நாடு முழுவதும் கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்து வருகிறது. நேற்று மட்டும் புதிதாக 3,324 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதன் மூலம் நான்காவது நாளாக தொடர்ந்து 3000க்கும் மேல் புதிதாக தொற்று பதிவாகி வருகிறது. கொரோனா நேர்மறை விகிதம் 0.71 சதவீதமாக உள்ளது.

குறிப்பாக, தலைநகர் டெல்லி,
உத்தரப்பிரதேசம்
உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் தொற்று அதிகரித்து வருகிறது. இதனிடையே, கொரோனா வைரஸின் புதிய திரிபான எக்ஸ்இ புதிய அச்சத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், ஜூன் மாதத்தில் கொரோனா தொற்றின் நான்காவது அலை வீசக் கூடும் என ஐஐடி கான்பூர் ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளது கவலையை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில், உத்தரப்பிரதேச மாநிலம் கவுதம்புத் நகரில்
144 தடையுத்தரவு
பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவு வருகிற 31ஆம் தேதி வரை அமலில் இருக்கும் என்று அம்மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதன்படி, நான்கு பேருக்கு மேல் பொது இடங்களில் கூட தடை விதிக்கப்பட்டுள்ளது. ரம்ஜான், அக்‌ஷய திரிதியை உள்ளிட்ட பண்டிகைகள் இந்த வாரம் வரும் நிலையில், இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பொது இடங்களில் பூஜை, நமாஸ் உள்ளிட்டவைகளுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. தலைநகர் டெல்லிக்கு அருகாமையில் இருக்கும்
கவுதம்புத் நகர்
மாவட்டத்தில் நொய்டா, தாத்ரி, ஜீவர் ஆகிய பகுதிகளும் அடங்கும் என்பது கவனிக்கத்தக்கது.

புதிய விதிமுறைகளின்படி, அனைத்து பள்ளிகளும் சரீர விலகலை கடைப்படிப்பது, முகக்கவசம் அணிவது போன்ற வழிகாட்டு நெறிமுறைகளை தொடர்ந்து பின்பற்றுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளன. தேர்வு மையங்கள், பள்ளிகள் அருகே ஒலிபெருக்கிகள் பயன்படுத்துவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளன. உயர் அதிகாரிகளின் அனுமதியின்றி கடைக்காரர்கள் யாருக்கும் ஒலிபெருக்கிகள் அல்லது அதுபோன்ற உபகரணங்களை விற்பனை செய்யவும், வாடகைக்கு விடவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, உத்தரப்பிரதேசத்தின் கவுதம்புத் நகர், காசியாபாத், ஹபூர், மீரட், புலன்சார் ஆகிய மாவட்டங்களிலும், தலைநகர் லக்னோ என மொத்தம் 6 மாவட்டங்களில் முகக்கவசம் மீண்டும் கட்டாயமாக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.