அடக்கம் செய்ய சவப்பெட்டியில் வைக்கப்பட்டிருந்த பெண் திடீரென கண் விழித்ததால் பரபரப்பு…!

லிமா,
பெரு நாட்டின் லம்பெகியூ பகுதியை சேர்ந்தவர் ரோசா இசபெல் சிஸ்பெடி காலஹா. 36 வயதான ரோசா கடந்த 26-ம் தேதி காரில் உறவினர்களுடன் பயணம் செய்துள்ளார். அப்போது, அந்த கார் விபத்துக்குள்ளானது.
அந்த விபத்தில் படுகாயமடைந்த ரோசா மற்றும் அவரது உறவினரை அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். அவர்களை பரிசோதனை செய்த மருத்துவர்கள் ரோசா, அவரது உறவினர் என இருவரும் உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர்.

இதனை தொடர்ந்து ரோசாவை அடக்கம் செய்வதற்கான வேலைகளை அவரது உறவினர்கள் செய்தனர். ரோசாவின் உடலை சவப்பெட்டியில் வைத்து அடக்கம் செய்யும் இடத்திற்கு கொண்டுவந்தனர். 
அவரை அடக்கம் செய்வதற்காக சவப்பெட்டியை திறந்தபோது ரோசா திடீரென கண் விழித்துள்ளார். மேலும், அந்த சவப்பெட்டியை ரோசா உதைத்துள்ளார். இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த உறவினர்கள் அப்படியே செய்வதறியாது உறைந்தனர்.
இதனை தொடர்ந்து உடனடியாக போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் சவப்பெட்டியோடு ரோசாவை அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால், சில மணிநேரத்திற்கு பின் ரோசா சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனால், ஆத்திரமடைந்த உறவினர்கள் மருத்துவமனையை முற்றுகையிட்டனர்.
இது குறித்து மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், விபத்தில் ரோசா மற்றும் அவரது உறவினர் என இருவரும் உயிரிழந்துவிட்டதாக மருத்துவமனை தரப்பில் தெரிவித்துள்ளது. ஆனால், விபத்தில் படுகாயமடைந்த ரோசா கோமா நிலையில் இருந்துள்ளார். கோமா நிலையில் இருந்த ரோசாவை சரியாக பரிசோதனை செய்யாமல் உயிரிழந்துவிட்டார் என அவரை பரிசோதித்த டாக்டர் தெரிவித்துள்ளார். 
ஆரம்பத்திலேயே ரோசா கோமா நிலையில் இருந்ததை கண்டறிந்து அவருக்கு போதிய சிகிச்சை அளித்திருந்தால் அவரை உயிர் பிழைக்கவைத்திருக்கலாம் என உறவினர்கள் ஆத்திரத்துடன் தெரிவித்தனர். மேலும், மருத்துவமனை மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்லனர். 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.