இந்திய மனைவிகள் பற்றி நீதிமன்றம் கருத்து| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

அலகாபாத்: வெளிநாடுகளுடன் ஒப்பிடுகையில் இந்திய மனைவிகள், தனது கணவர் மீது அதீத அன்பு வைத்துள்ளதாகவும், அவர்கள் யாருடனும் தங்களது கணவரை பகிர்ந்து கொள்ள மாட்டார்கள் எனவும் அலகாபாத் உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.

உத்தரபிரதேச மாநிலம் வாரணாசியைச் சேர்ந்தவர் சுஷில் குமார். இவருக்கு ஏற்கனவே திருமணம் ஆகி இரு குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில், முறையாக விவாகரத்து பெறாமல் வேறொரு பெண்ணை திருமணம் செய்துக்கொண்டதாக முதல் மனைவி போலீசில் புகார் அளித்தார். இது தொடர்பாக கணவர் சுஷில் குமார் மற்றும் அவரது குடும்பத்தினர் ஆறு பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். வழக்குப்பதிவு செய்த சிறிது நேரத்தில் முதல் மனைவி விஷமருந்தி தற்கொலை செய்துக்கொண்டார். இந்த வழக்கு தொடர்பாக சுஷில் குமார் உள்ளிட்டோரை போலீசார் கைது செய்தனர். இந்த நிலையில் தங்களை விடுவிக்குமாறு சுஷில் குமார் சார்பில் விசாரணை நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இதனை நீதிமன்றம் நிராகரித்தது.

latest tamil news

இதனையடுத்து அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார் சுஷில் குமார். இதனை விசாரித்த நீதிபதி ராகுல் சதுர்வேதி கூறியதாவது: வெளிநாடுகளை ஒப்பிடும் இந்தியப் பெண்கள் தங்கள் கணவர்கள் மீது அதீத அன்பை வைத்துள்ளனர். தங்கள் கணவரை யாரிடமும் பகிர்ந்து கொள்ளவோ அல்லது வேறு ஒருவரை திருமணம் செய்வதையோ அவர்கள் விரும்புவதில்லை. அப்படியிருக்கும் போது, தனது கணவர் வேறொரு பெண்ணை ரகசிய திருமணம் செய்து கொண்டார் என்பது இந்தியப் பெண்களுக்கு மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தும் என்பதில் சந்தேகமில்லை.

தங்கள் வாழ்க்கையை முடித்துக்கொள்ளும் அளவுக்கு கூட அவர்கள் சென்று விடுகிறார்கள். இந்த வழக்கிலும் இதுதான் நடந்துள்ளது. சுஷில்குமார் வேறு திருமணம் செய்து கொண்டதை தாங்க முடியாமல்தான் அவரது மனைவி தற்கொலை செய்து கொண்டிருக்கிறார் என்பதை புரிந்து கொள்ள முடிகிறது. எனவே இந்த வழக்கில் அவரை விடுதலை செய்ய முடியாது. இவ்வாறு நீதிபதி கூறினார்.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.