இளம்பெண்ணை கொன்று உடல் பிளாஸ்டிக் பேரலில் அடைப்பு- துப்பு கொடுப்பவர்களுக்கு சன்மானம் அறிவிப்பு

திருப்பதி:

ஆந்திர மாநிலம் கர்னூல் மாவட்டம் சோமயாஜுல கிராமத்தில் ஊருக்கு வெளியே சாலையின் குறுக்கே சிறிய அளவிலான பாலம் உள்ளது.

பாலத்திற்கு அடியில் பிளாஸ்டிக் பேரல் ஒன்று வைக்கப்பட்டு இருந்தது. அதிலிருந்து துர்நாற்றம் வீசியது. அந்த வழியாக சென்றவர்கள் பேரலை எட்டிப் பார்த்தபோது சுமார் 35 வயது மதிக்கத்தக்க இளம்பெண் பிணம் அடைக்கப்பட்டு இருந்தது. இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் இது குறித்து கர்நூல் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பேரலில் அடைக்கப்பட்டு இருந்த பெண் பிணத்தை மீட்டனர்.

கொலை செய்யப்பட்ட பெண் சேலை அணிந்து கழுத்தில் டாலர் செயின் மற்றும் கம்மல், மூக்குத்தி அணிந்துள்ளார். இளம்பெண்ணை வேறு எங்கேயோ கொலைசெய்து எடுத்துவந்து பேரலில் உடலை அடைத்து இங்கு வீசி சென்றுள்ளனர். அவரது வாயில் பிளாஸ்திரி போட்டு ஒட்டப்பட்டுள்ளது. மேலும் கை கால்களும் கட்டப்பட்ட நிலையில் உள்ளது.

பிணத்தை மீட்ட போலீசார் பிரேத பரிசோதனைக்காக கர்னூல் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கொலை செய்யப்பட்ட பெண் அணிந்திருந்த நகைகள் அனைத்தும் அப்படியே இருப்பதால் கள்ளக்காதல் தகராறில் கொலை செய்யப்பட்டாரா? அல்லது வேறு ஏதாவது காரணமா என பல்வேறு கோணங்களில் போலீசார் துப்பு துலக்கி வருகின்றனர்.

மேலும் இறந்து கிடந்த பெண் குறித்து தகவல் அளிப்பவர்களுக்கு போலீஸ் சார்பில் சன்மானம் வழங்கப்படும் என அறிவித்துள்ளனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.