எம்எல்ஏ பாஜகவுக்கு தாவல்; ஹர்த்திக் படேல் விலக திட்டம்?- குஜராத் காங்கிரஸில் அடுத்தடுத்து புயல்

காந்திநகர்: குஜராத் காங்கிரஸில் இருந்து செயல் தலைவர் ஹர்த்திக் படேல் விலகப்போவதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில் அக்கட்சி எம்எல்ஏ அஸ்வின் கோட்வால் ராஜினாமா செய்துள்ளார். அவர் பாஜகவில் இணைந்தார்.

குஜராத் மாநிலத்தில் இந்த ஆண்டு இறுதியில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறகிறது. அங்கு அரசியல் நடவடிக்கைகள் தீவிரமாகியுள்ளன. பாஜக, காங்கிரஸ், ஆம் ஆத்மி ஆகிய கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரமாக இறங்கியிருக்கின்றன.

இந்தநிலையில் குஜராத் மாநில காங்கிரஸில் உட்கட்சிப்பூசல் ஏற்பட்டுள்ளது. தலைமை மீது கடும் அதிருப்தியில் உள்ள குஜராத் மாநில காங்கிரஸின் செயல் தலைவர் ஹர்திக் படேல் அக்கட்சியில் இருந்து விலகப்போவதாகவும் தகவல்கள் வெளியாகின.

இதற்கு ஏற்ப குஜராத் காங்கிரஸ் தலைவர்களின் செயல்பாடுகள் குறித்து அவர் கடுமையாக விமர்சித்து இருந்தார். அதேசமயம் காங்கிரஸில் இருந்து வெளியேற மாட்டேன் எனவும், காங்கிரஸின் வளர்ச்சிக்கு 100 சதவீதம் பணியாற்றியுள்ளதாக தெரிவித்தார்.

இதனிடையே ஹர்திக் படேல் தனது ட்விட்டர் பக்கத்தின் பயோ-டேட்டாவிலிருந்து காங்கிரஸ் செயல் தலைவர் என்பதை நீக்கியுள்ளார். இதனால் காங்கிரஸிலிருந்து அவர் விலகப் போகிறாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. அதுபோலவே அவர் ஆம் ஆத்மி கட்சியில் இணைவது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

அஸ்வின் கோட்வால்

இந்த பரபரப்பு அடங்குவதற்குள் குஜராத்தில் காங்கிரஸ் சார்பில் மூன்று முறை எம்எல்ஏவாக இருந்த அஸ்வின் கோட்வால் அக்கட்சியில் இருந்து விலகியுள்ளார். கேத்பிரம்மா பழங்குடி தொகுதியில் இருந்து எம்எல்ஏவாக தேர்ந்தெடுக்கப்பட்டவர் ஆவார். அவர் சட்டப்பேரவை சபாநாயகரை சந்தித்து எம்எல்ஏ பதவியில் இருந்து ராஜினாமா செய்வதற்கான கடிதத்தை வழங்கினார். இதனைத் தொடர்ந்து அவர் பாஜகவில் இணைந்தார்.

கடந்த சில நாட்களாகவே, தனக்கு சட்டப்பேரவை எதிர்க்கட்சி தலைவர் பதவி வழங்கப்படாததால் காங்கிரஸ் தலைமை மீது கோட்வால் அதிருப்தியில் இருந்தார். இதுகுறித்து அவர் கூறுகையில் ‘‘குஜராத்தில் 2007-ம் ஆண்டு முதல் காங்கிரஸ் எம்.எல்.ஏ-வாக பணியாற்றி வருகிறேன். குஜராத் முதல்வராக இருந்ததில் இருந்தே நரேந்திர மோடியின் செயல்பாடுகளை நான் பார்த்திருக்கிறேன்.

அன்று முதல் அவரால் ஈர்க்கப்பட்டேன். ஆனால் கொள்கை காரணமாக காங்கிரஸில் இருந்தேன். எனது பகுதியில் உள்ள பழங்குடியினரின் வளர்ச்சியை கொண்டு வந்து அவர்களுக்காக பாடுபட வேண்டும் என்றால், பாஜகவால் மட்டுமே வளர்ச்சியை கொண்டு வர முடியும் என்று இப்போது தெரிகிறது. அதனால் நான் பாஜகவில் இணைந்துள்ளேன்’’ என்று தெரிவித்தார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.