சென்னை: தமிழகத்தில் தடுப்பூசி இயக்கத்தின் பிராண்ட் ஆக நடிகர் விவேக் செயல்பட்டார் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.
மறைந்த நகைச்சுவை நடிகர் விவேக் வீடு அமைந்துள்ள விருகம்பாக்கம் பத்மாவதி சாலையை “சின்னக் கலைவானர் விவேக் சாலை” என்று பெயர் மாற்றம் செய்யப்பட்ட நிலையில், பெயர்ப் பலகையை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியம் இன்று திறந்து வைத்ததார்.
இந்த நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், “விவேக் எனது நீண்ட கால நண்பர். பொதுவாக தற்போது சாலைகளுக்கு தனிநபர்களின் பெயர் வைப்பது இல்லை. அப்படி பெயர் வைக்க வேண்டும் என்றால் பல்வேறு நிலைகளில் அதற்கு அனுமதி வழங்க வேண்டும். ஆனால் விவேக் பெயரை வைக்க வேண்டும் எனக் கேட்டவுடன் அதற்கு அனுமதி வழங்கப்பட்டது. விவேக் மறைவுக்கு 2 நாட்களுக்கு முன்பு அப்போது இருந்த ஆளும் கட்சியாக இருந்தவர்கள் விவேக்கை தடுப்பூசி செலுத்திக் கொண்டு மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்று கேட்டுக் கொண்டனர். அவர் இறப்புக்கு 2 நாட்களுக்கு முன்பு கூட தடுப்பூசிக்கு விழிப்புணர்வு ஏற்படுத்திய பிறகு உயிரிழந்து இருக்கிறார். தமிழகத்தில் மக்கள் ஆர்வமாக தடுப்பூசி செலுத்த ஒரு ‘பிராண்ட்’ ஆக நடிகர் விவேக் செயல்பட்டார்
கோடை வெப்பத்தில் இருந்து மக்கள் தங்களை எப்படி தற்காத்துக் கொள்ளவது என்பது குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நாளை நடைபெற இருக்கிறது.
சைதாப்பேட்டை பகுதியில் நாட்டு மரங்கள் நிறைய நட்டு வைத்து இருக்கிறோம். இன்னும் இரண்டு ஆண்டுகளில் ’வனத்தில் ஒரு தொகுதி’ என்ற நிலைமையில் சைதாப்பேட்டை தொகுதி இருக்கும். சைதாப்பேட்டையில் 98 ஆயிரம் மரம் தற்போது வரையும் நட்டு இருக்கிறோம்.1 லட்சம் மரம் நட்டு அந்த 1 லட்சமாவது மரத்திற்கு நடிகர் விவேக் மரம் என்ற பெயர் வைக்க இருக்கிறோம்.. ஆனால் அதனைப் பார்க்க அவர் தான் இல்லை” என்று தெரிவித்தார்.