தப்புமா மகிந்த ராஜபக்‌ஷே ஆட்சி?- நாளை கூடும் இலங்கை பாராளுமன்றம்

கொழும்பு:
இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி மேலும் வலுவடைந்துள்ளது. நாளுக்கு நாள் அத்தியாவசிய பொருட்களுக்கான தட்டுப்பாடு மேலும் அதிகரித்தபடி உள்ளது. இதனால் ஆத்திரம் அடைந்த மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தற்போது டேங்கர் லாரிகளும் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளதால், இலங்கையில் எரிபொருள் வினியோகத்திலும் கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காணும் வகையில் மகிந்த ராஜபக்சே பிரதமர் பதவியில் இருந்து விலகிவிட்டு அனைத்து கட்சிகள் கொண்ட அமைச்சரவையை உருவாக்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. ஆனால் மகிந்த ராஜபக்சே அதை ஏற்கவில்லை.
இந்த பரபரப்பான சூழ்நிலையில் இலங்கை பாராளுமன்றம் நாளை (புதன்கிழமை) கூடுகிறது. அப்போது எதிர்க்கட்சிகள் மகிந்த ராஜபக்சேவுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவர திட்டமிட்டுள்ளன. இதனால் இலங்கை அரசியலில் எந்த நேரமும் எதுவும் நடக்கலாம் என்ற நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து ராஜ பக்சேவை கவிழ்க்க திட்டமிட்டுள்ளன. எதிர்க்கட்சிகளுக்கு அந்த அளவுக்கு பலம் இல்லை என்றாலும், ஆளும் கட்சியின் எம்.பி.க்கள் துணையுடன் மகிந்த ராஜபக்சேவை விரட்ட திட்டமிடப்பட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.