தாதா சாகேப் சர்வதேச திரைப்படவிழா -‘ஜெய்பீம்‘ படத்திற்கு 2 விருதுகள்; இளையராஜாவுக்கு விருது

நடிகர் சூர்யாவின் நடிப்பு மற்றும் தயாரிப்பில் உருவான ‘ஜெய்பீம்’ திரைப்படம், தாதா சாகேப் பால்கே சர்வதேச திரைப்பட விழாவில் இரண்டு விருதுகளை பெற்றுள்ளது. இந்த விழாவில் இசையமைப்பாளர் இளையராஜாவுக்கும் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய திரைப்படத்துறையின் தந்தை என்று அழைக்கப்படும் தாதா சாகேப் பால்கே பிறந்த தினமான ஏப்ரல் 30-ம் தேதியை முன்னிட்டு, வருடந்தோறும் சர்வதேச திரைப்பட விழா நடைபெறும். அதன்படி, 12-வது தாதா சாகேப் பால்கே சர்வதேச திரைப்பட விழா தலைநகர் டெல்லியில் நடைபெற்றது. இந்த விழாவில், நடிகர் சூர்யாவின் ‘ஜெய்பீம்’ திரைப்படத்திற்கு 2 விருதுகள் கிடைத்துள்ளது.

த.செ. ஞானவேல் இயக்கத்தில் கடந்த ஆண்டு, நவம்பர் மாதம் 2-ம் தேதி தீபாவளியை முன்னிட்டு, அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியான திரைப்படம் ‘ஜெய்பீம்’. ஜோதிகா- சூர்யாவின் 2டி எண்டெர்டெயின்மெண்ட் நிறுவனம் இந்தப் படத்தை தயாரித்திருந்தது. முக்கிய கதாபாத்திரத்தில் சூர்யா நடித்திருந்தார். சில சர்ச்சைகளை சந்தித்தாலும், ரசிகர்களிடையே இந்தப் படம் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது. இந்நிலையில், தாதா சாகேப் பால்கே சர்வதேச திரைப்பட விழாவில், ‘ஜெய்பீம்’ படம் சிறந்த படமாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.

image

அதேபோல், இந்தப் படத்தில் செய்யாத குற்றத்திற்காக காவல்துறையின் பிடியில் சிக்கித் தவித்த ராசாக் கண்ணு கதாபாத்திரத்தில், மிகச் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருந்த மணிகண்டன் சிறந்த துணை நடிகராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இதனை சூர்யாவின் 2டி எண்டெர்டெயின்மெண்ட் நிறுவனம் தனது ட்விட்டர் பக்கத்தில் மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளது.

மேலும், இளையராஜாவின் இசையில் 1422-வது படமாக தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி, ஆங்கிலம் உள்பட பல மொழிகளில் உருவாகி வரும் ‘ஏ பியூட்டிஃபுல் பிரேக்கப்’ என்ற படத்திற்காக இளையராஜாவிற்கு பின்னணி இசைக்கான விருது அறிவிக்கப்பட்டுள்ளது. சிறந்த நடிகராக ‘Toofaan’ படத்தில் நடித்தற்காக ஃபர்கான் அக்தர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

image

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.