பணிப்பகிஷ்கரிப்புக்கு ஆதரவு வழங்க மாட்டோம் – தொழிற்சங்க பிரதிநிதிகளுக்கு நன்றி கூறிய ஜனாதிபதி (Photo)


 குறுகிய அரசியல் நலன்களை முன்னிறுத்தி மக்களை சங்கடப்படுத்தும் நோக்கில் எதிர்வரும் 6ம் திகதி முன்னெடுக்கப்படவுள்ள பணிப்பகிஷ்கரிப்புக்கு ஆதரவு வழங்கப் போவதில்லை என தொழிற்சங்க பிரதிநிதிகள் ஜனாதிபதியிடம் தெரிவித்துள்ளனர்.

இன்று (03) பிற்பகல் கோட்டையிலுள்ள ஜனாதிபதி மாளிகையில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கும் தொழிற்சங்கப் பிரதிநிதிகளுக்கும் இடையில் இடம்பெற்ற சந்திப்பின் போதே அவர்கள் இவ்வாறு தெரிவித்துள்ளனர்.

இக்கலந்துரையாடலின் போது, ​​அத்தியாவசிய சேவை வழங்குனர்கள் பலவற்றின் தொழிற்சங்கப் பிரதிநிதிகள், தமது பணிகளைத் தொடர்வதற்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுப்பதாகத் தெரிவித்தனர்.

தற்போதைய பொருளாதார நெருக்கடியை மேலும் மோசமாக்கி மக்களை ஒடுக்குவதே வேலை நிறுத்தத்தின் நோக்கம் என அவர்கள் ஜனாதிபதியிடம் தெரிவித்ததாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

எனவே நிலைமையை புரிந்து மக்களின் இயல்பு வாழ்க்கையை பேணுவதற்கு நடவடிக்கை எடுப்பது அனைத்து ஊழியர்களின் கடமையும் பொறுப்பும் என தொழிற்சங்க பிரதிநிதிகள் தெரிவித்தனர்.

பொருளாதார நெருக்கடியை சமாளிக்க புதிய வழிமுறைகளை கையாண்டு அரசியல் பிளவுகளிலிருந்து விலகிச் செல்ல வேண்டியதன் அவசியத்தையும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

வேலைநிறுத்தங்கள் காரணமாக பொருளாதார நெருக்கடியை மேலும் மோசமாக்கும் அரசியல் நோக்கமே இதன் பின்னணியில் இருப்பதாகவும், நிறுவனங்கள் வீழ்ச்சியடைவதற்கு இடமளிக்கக் கூடாது எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

கடந்த 28ம் திகதி வேலை நிறுத்தத்தை பொருட்படுத்தாமல் தமது கடமைகளை ஆற்றிய ஊழியர்களுக்கு நன்றி தெரிவித்த ஜனாதிபதி, நிலைமையை புரிந்து கொண்டு மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு தேவையான உதவிகளை வழங்குமாறு அனைத்து தொழிற்சங்கங்களுக்கும் அழைப்பு விடுத்தார்.

Gallery



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.