சென்னை: அரசின் கொள்கை முடிவு மீறப்பட்டால் சம்பந்தபட்ட மருத்துவக் கல்லூரி முதல்வர் மீது துறை ரீதியான கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஆலோசனை கூட்டத்தில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தமிழக சுகாதாரத்துறை சார்பில் அனைத்து அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர்கள் மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள் உடனான அவசர ஆலோசனை கூட்டம் சென்னை ஓமந்தூரார் பல்நோக்கு மருத்துவமனையில் இன்று நடைபெற்றது சுகாதாரத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆலோசனை கூட்டத்தில் சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன் , மருத்துவ கல்வி இயக்குனர் நாராயண பாபு மற்றும் சுகாதாரத் துறையை சேர்ந்த அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர். தமிழகம் முழுவதும் உள்ள 37 அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர்கள் மற்றும் மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு பல்வேறு விதமான ஆலோசனைகளை வழங்கினர்.
குறிப்பாக ஹிப்போகிரெடிக் உறுதி மொழியை மட்டுமே மாணவர்கள் ஏற்க வேண்டும், சரக் சபத் உள்ளிட்ட வேறெந்த உறுதிமொழியையும் ஆங்கிலத்திலோ அல்லது சமஸ்கிருதம் உள்ளிட்ட வேறெந்த மொழிகளிலோ ஏற்கப்படக் கூடாது, அவ்வாறு எங்கேனும் தமிழக அரசின் கொள்கை முடிவு மருத்துவக் கல்லூரிகளில் மீறப்பட்டால் சம்மந்தப்பட்ட கல்லூரி முதல்வர்கள் மீது துறை ரீதியான கடும் நடடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.
மேலும் அரசு மருத்துவமனைகளின் பழைய கட்டடங்களின் தரம், புதுப்பிக்க வேண்டிய கட்டடங்கள், பழைய கட்டிடங்களில் பயன்படுத்த முடியாத நிலையில் இருப்பவை, இடிக்க வேண்டியவை, புதிய கட்டடிடம் தேவைப்படுபவை, தீத்தடுப்பு நடவடிக்கைள் குறித்து விரிவாக ஆலோசனை வழங்கப்பட்டது. இதைத்தவிர்த்து கோவிட் தொற்று குறைந்து வந்தாலும் தயார் நிலையில் படுக்கைகள் இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என்று அமைச்சர் அறிவுறுத்தினார்.