அரசு நிலத்தை திரும்ப அளித்தார் கிரிக்கெட் அணியின் மாஜி கேப்டன்| Dinamalar

மும்பை:கிரிக்கெட் அகாடமி துவங்க, 33 ஆண்டுகளுக்கு முன் மும்பையில் அரசு வழங்கிய நிலத்தை ஒப்படைத்தார், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் கவாஸ்கர்.

கடந்த, 1989ல் மஹாராஷ்டிர வீட்டு வசதி மேம்பாட்டு வாரியம், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் கவாஸ்கரின் அறக்கட்டளைக்கு, பயிற்சி அகாடமி அமைக்க, 21 ஆயிரத்து 348 ச.அடி நிலத்தை வழங்கியது.பல ஆண்டுகள் ஆகியும் அகாடமி அமைக்காததால், அந்த நிலத்தை திரும்ப ஒப்படைக்குமாறு, மஹா., வீட்டு வசதி மேம்பாட்டு வாரியம், கவாஸ்கர் அறக்கட்டளையிடம் தெரிவித்தது.
இதையடுத்து, மும்பையின் பாந்த்ரா புறநகர் பகுதியில் உள்ள அந்த நிலத்தில், இந்திய கிரிக்கெட் முன்னாள் கேப்டன் சச்சின் டெண்டுல்கருடன் இணைந்து அகாடமி அமைக்க கவாஸ்கர் முயன்றார். அந்த முயற்சி தோல்வியில் முடிவடைந்தது. இதற்கிடையே, கடந்த எட்டு மாதங்களாக நிலத்தை திரும்பப் பெறும் முயற்சிகளை வீட்டு வசதி மேம்பாட்டு வாரியம் மேற்கொண்டது.
இந்நிலையில், மஹாராஷ்டிர முதல்வர் உத்தவ் தாக்கரேவுக்கு கவாஸ்கர் எழுதியுள்ள கடிதத்தில், ‘கிரிக்கெட் அகாடமி அமைக்க முடியாததால், தன் அறக்கட்டளை சார்பில் பெறப்பட்ட நிலத்தை திரும்ப ஒப்படைக்கிறேன்’ என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

கவாஸ்கர், 33 ஆண்டுகளுக்குப் பின் அரசிடம் திரும்ப ஒப்படைக்கும் நிலத்தில் வீட்டு வசதி குடியிருப்புகள் கட்டப்படும் என தெரிகிறது.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.