சென்னை: தேசிய மருத்துவ ஆணையம் வழங்கி உள்ள சரகர் உறுதி மொழியில் மருத்துவர்கள் யாருக்கு சிகிச்சை அளிக்க வேண்டும் என்பதில் தவறான கருத்துகள் உள்ளதால் எதிர்க்கிறோம் என மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.
சென்னை ஒமந்தூரார் அரசு பன்னோக்கு மருத்துவமனை வளாகத்தில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன், “மருத்துவ மாணவர்கள் உறுதிமொழி விவாகரத்தில் நாடாளுமன்றத்தில் ஒன்றிய துணை அமைச்சர் சர்கர் உறுதிமொழி எடுக்க வேண்டும் எனவும், உத்தரவு வழங்கவில்லை என கூறியுள்ளார். எனவே மருத்துவத்துறையின் உயர் அதிகாரிகள் அனுமதி இல்லாமல் புதிய முயற்சிகளை மேற்கொள்ளக்கூடாது.
ஏற்கெனவே உள்ள உறுதிமொழி ஆங்கில மருத்துவர் ஹிப்போகிரட்டிக் கொண்டு வந்தது. அதில் ஏழைகளுக்கு மருத்துவம் செய்ய வேண்டும்.மருத்துவர்கள் தன்னால் முடிந்ததை தெரிவிக்க வேண்டும். தன்னால் முடியாவிட்டால் வேறு மருத்துவரின் உதவியை நாட வேண்டும் உள்ளிட்டவைகளை கொண்ட அற்புதமான உறுதிமொழியாகும். சரகர் உறுதிமொழியில் , படிக்க வரும்போது, வேள்வித்தீயின் முன்னாள் நின்று சபதம் சமஸ்கிருதத்தில் உறுதி ஏற்றுக் கொள்ள வேண்டும். யாராவது ஒரு பெண் கணவருடனோ அல்லது வேறுத் துணையோ இல்லாமல் வந்தால் மருத்துவம் பார்க்க வேண்டிய அவசியமில்லை, வேந்தர்கள் தற்பொழுது அரசர்கள் இல்லாமல் இருக்கின்றனர். எனவே பிரதமர், முதலமைச்சர் போன்றவர்களை மதிக்காதவர்களுக்கும், தீயப்பழக்கம் உடையவருக்கும் மருத்துவம் பார்க்கக் கூடாது என்று உள்ளது.
மருத்துவர் என்றால் தன்னை கத்தியால் குத்தவரும் குற்றாவாளியாக இருந்தாலும், தனக்கு ஏற்பட்ட வெட்டக்காயத்தை விட அதனை பெரியதாக கருதி சிகிச்சை அளிக்க வேண்டும். சரகர் உறுதிமொழியில் கூறப்பட்டது போன்றவற்றை கற்றுத் தரக்கூடாது. இந்தியாவில் 127 கோடி மக்கள் இருக்கும் போது, 7கோடி மக்கள் உள்ள தமிழகத்தில் 24 ஆயிரம் பேசும் மொழியை தினிக்க நினைப்பது தவறு அதனால் தான் எதிர்க்கிறோம்” என்று தெரிவித்தார்.