சிக்கன் ஷவர்மா சாப்பிட்ட மாணவியின் மரணத்துக்கு ஷிகெல்லா பாக்டீரியா தான் காரணம்: பிரேத பரிசோதனையில் தகவல்

திருவனந்தபுரம்: கேரளாவில் சிக்கன் ஷவர்மா சாப்பிட்டு பிளஸ் 1 மாணவி பலியானதற்கு ஷிகெல்லா பாக்டீரியா தான் காரணம் என்று பிரேத பரிசோதனை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கேரள மாநிலம் காசர்கோடு அருகே செறுவத்தூர் பகுதியை சேர்ந்தவர் தேவநந்தா (16). பிளஸ் 1 மாணவி. இவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு அங்குள்ள ஒரு ஓட்டலில் சிக்கன் ஷவர்மா சாப்பிட்டதால் மரணமடைந்தார். அவருடன் அதே ஓட்டலில் ஷவர்மா சாப்பிட்ட மேலும் 50க்கும் மேற்பட்டோர் வாந்தி, வயிற்றுப்போக்கு, மயக்கம் ஆகிய அறிகுறிகள் காரணமாக பல்வேறு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.இந்நிலையில் மரணமடைந்த தேவநந்தாவின் உடல், கண்ணூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. அதன் அறிக்கையில் தேவநந்தாவின் மரணத்திற்கு ஷிகெல்லா பாக்டீரியா தான் காரணம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து காசர்கோடு மாவட்ட மருத்துவ அதிகாரி டாக்டர் ராம்தாஸ் கூறுகையில், ‘மாணவி தேவநந்தாவின் மரணத்திற்கு ஷிகெல்லா பாக்டீரியா தான் காரணம் என்பது தெரியவந்துள்ளது. அவர் சாப்பிட்ட சிக்கன் ஷவர்மாவில் இந்த பாக்டீரியா பரவியுள்ளது. பொதுவாக அசுத்தமான தண்ணீர் மற்றும் உணவு பொருட்களில்தான் இந்த பாக்டீரியா வேகமாக பரவும். ஷவர்மா சாப்பிட்ட மேலும் 3 மாணவிகளுக்கு ஷிகெல்லா வைரஸ் பரவியுள்ளது. அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது’ என்றார். கோழிக்கோட்டை தொடர்ந்து காசர்கோடு மாவட்டத்திலும் ஷிகெல்லா வைரஸ் பரவுவதை தொடர்ந்து நோயை கட்டுப்படுத்த கேரள சுகாதார துறை தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.