தகவல் தொழில்நுட்பவியல் துறையின் பெயர் மாற்றம்- சட்டசபையில் அமைச்சர் மனோ தங்கராஜ் அறிவிப்பு

சென்னை:
தமிழக சட்டசபையில் இன்று தகவல் தொழில்நுட்பவியல் துறை மானியக்கோரிக்கை விவாதத்தின்போது அமைச்சர் மனோ தங்கராஜ் புதிய அறிவிப்புகளை வெளியிட்டு பேசியதாவது:-
மாநிலத்தில் தகவல் தொழில்நுட்பத்துறையின் வளர்ச்சிக்கு ஆதரவளிக்கவும் மற்றும் மின் ஆளுகையின் வளர்ச்சியை உறுதி செய்யும் நோக்கத்துடனும், தகவல் தொழில்நுட்பவியல் துறை 5-10-1998 அன்று உருவாக்கப்பட்டது. 
தகவல் தொழில்நுட்பம் மற்றும் தகவல் தொழில்நுட்பச் சேவைத் துறைகளின் வளர்ச்சியானது ஒன்றுக்கொன்று தொடர்புடையதாகும். எனவே ஒருங்கிணைந்த வளர்ச்சியை அடைவதற்கு முன்முயற்சியுடன் கூடிய ஒருங்கிணைந்த கொள்கைவழி அணுகுமுறை தேவைப்படுகிறது.
முதல்கட்டமாக வளர்ந்து வரும் தொழில்நுட்ப பிரிவுக்கு தலைமை தாங்கும் வகையில், தலைமை தொழில்நுட்ப அதிகாரி பதவி, தகவல் தொழில்நுட்பவியல் துறையில் ஏற்கெனவே உருவாக்கப்பட்டுள்ளது. வளர்ந்து வரும் மற்றும் ஆழ்நிலை தொழில்நுட்பங்களில் தொடக்கநிலை நிறுவனங்கள் மூலம் புதுமைகளை உருவாக்குவதற்கு ஏதுவாக, தமிழ்நாடு தொழில்நுட்ப மையம் ஒன்று சென்னையில் அரசால் நிறுவப்பட்டு வருகிறது. 
எனவே மாநிலத்தில் தகவல் தொழில்நுட்பம் மற்றும் தகவல் தொழில்நுட்பம் சார்ந்த சேவைகள் மற்றும் டிஜிட்டல் தொழில்நுட்ப சேவைகளின் வளர்ச்சியை வலுப்படுத்த இத்துறை, “தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை” என மறுபெயரிடப்படும்.
இவ்வாறு அமைச்சர் பேசினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.