நடிகர் விஜய் பாபுவுக்கு எதிரான நடவடிக்கையில் திருப்தி இல்லை மலையாள நடிகர் சங்கத்தில் இருந்து ஸ்வேதா மேனன் உள்பட 3 நடிகை ராஜினாமா

திருவனந்தபுரம்: நடிகை பலாத்கார வழக்கு தொடர்பாக நடிகர் விஜய் பாபு மீது எடுக்கப்பட்ட நடவடிக்கையில் திருப்தி இல்லை என்று கூறி மலையாள நடிகர் சங்க உள் புகார் கமிட்டியில் இருந்து நடிகை ஸ்வேதா மேனன் உள்பட 3 நடிகைகள் ராஜினாமா செய்தது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மலையாள சினிமாவில் முன்னணி நடிகர் மற்றும் தயாரிப்பாளர் விஜய் பாபு. இவர் ஒரு இளம் நடிகை, கொச்சி காவல் நிலையத்தில் அளித்த புகாரில், ‘சினிமாவில் கூடுதல் வாய்ப்புகள் தருவதாக கூறி ஓட்டல், அடுக்குமாடி குடியிருப்புக்கு வரவழைத்து தன்னை கொடூரமாக விஜய் பாபு பலாத்காரம் செய்தார்’ என்று கூறியிருந்தார். அவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். விஜய் பாபு வெளிநாட்டில் தலைமறைவாக இருப்பதால் அவரை கைது செய்ய முடியவில்லை. வெளிநாட்டில் இருந்தபடியே முன்ஜாமீன் பெற முயற்சி செய்து வருகிறார். அதற்குள் அவரை கைது செய்ய கொச்சி போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்து வருவதாக கூறப்படுகிறது. இதற்கிடையே மலையாள நடிகர் சங்கத்தில் இருந்து விஜய் பாபுவை நீக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பிலிருந்து கோரிக்கை எழுந்தது. இதைதொடர்ந்து கடந்த சில தினங்களுக்கு முன் மலையாள நடிகர் சங்க நிர்வாக குழு கூட்டம் நடந்தது. அதில், தான் குற்றவாளி அல்ல என நிரூபணமாகும் வரை நடிகர் சங்கத்தில் இருந்து விலகி இருப்பதாக கூறி விஜய் பாபு கடிதம் கொடுத்திருப்பதாகவும், அந்த கடிதத்தை ஏற்று கொள்வதாகவும் தெரிவிக்கப்பட்டது. இதற்கு நடிகைகள் ஸ்வேதா மேனன், மாலா பார்வதி உள்பட பலர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். விஜய் பாபுவை நடிகர் சங்கத்தில் இருந்து உடனே நீக்க வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்தனர். அதற்கு மலையாள நடிகர் சங்கம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதைத்தொடர்ந்து நடிகர் சங்க உள் புகார் கமிட்டியில் இருந்து ராஜினாமா செய்வதாக நடிகைகள் ஸ்வேதா மேனன், மாலா பார்வதி, குக்கு பரமேஸ்வரன் ஆகியோர் அறிவித்துள்ளனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.