நீலகிரி, கிருஷ்ணகிரி, வேலூர் உள்ளிட்ட 7 மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு: அக்னி நட்சத்திரம் இன்று தொடங்குகிறது

சென்னை: அக்னி நட்சத்திரம் இன்று தொடங்க உள்ள நிலையில், நீலகிரி, கிருஷ்ணகிரி, வேலூர் உள்ளிட்ட 7 மாவட்டங்களில் நாளை கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் நேற்று வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:

வளிமண்டல காற்று சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தின் மேற்கு மாவட்டங்களில் நேற்று பரவலாக மழை பெய்தது. அதிகபட்சமாக நீலகிரியில் 30 மி.மீ. பதிவானது. இதுதவிர கிருஷ்ணகிரி, சேலம், தருமபுரி, ஈரோடு, கோவை மாவட்டங்களிலும் ஆங்காங்கே மிதமான மழை பெய்தது.

வேலூரில் 105 டிகிரி

அதேநேரம் மாநிலத்தின் பிற மாவட்டங்களில் வெயில் தாக்கம் சற்று உயர்ந்து காணப்பட்டது. அதிகபட்சமாக வேலூரில் 105 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவானது. மதுரை விமான நிலையம், திருச்சியில் தலா 104, திருத்தணியில் 103, மதுரை நகரம், ஈரோடு, கரூர், தஞ்சாவூரில் 102, சேலத்தில் 101, திருநெல்வேலியில் 100 டிகிரி பாரன்ஹீட் வெப்பநிலை பதிவானது.

காற்று சுழற்சி தாக்கம் நீடிப்பதால் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 2 நாட்கள் ஒருசில இடங்களில் மிதமான மழை பெய்யக் கூடும். கிருஷ்ணகிரி, தருமபுரி, வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, சேலம், நீலகிரி ஆகிய 7 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் நாளை (மே 5) கனமழை பெய்யக்கூடும். டெல்டா மற்றும் அதையொட்டிய கடலோர மாவட்டங்களில் 7-ம் தேதி பரவலாக மழை பெய்யும்.

தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு ஓரிரு இடங்களில் வெப்பநிலை இயல்பைவிட 2 முதல் 3 டிகிரி வரை வெப்பம் உயரக்கூடும்.

தெற்கு அந்தமான் மற்றும் அதையொட்டிய பகுதிகளில் காற்று சுழற்சி இன்று உருவாகக்கூடும். இது காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக 6-ம் தேதி வலுவடையும். இதன் காரணமாக அந்தமான் மற்றும் அதை சுற்றிய வங்கக்கடல் பகுதிகளில் அதிகபட்சமாக 70 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும். எனவே, இந்தப் பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம். இவ்வாறு வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அக்னி நட்சத்திரம் இன்று தொடக்கம்

நடப்பாண்டு அக்னி நட்சத்திரம் இன்று தொடங்குகிறது. இந்த காலகட்டத்தில் வெயிலின் தாக்கம் மேலும் அதிகரிக்கக் கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வேலூர், திருத்தணி உள்ளிட்ட சில நகரங்களில் வெப்பநிலை 110 டிகிரி பாரன்ஹீட் அளவைத் தொடவும் வாய்ப்பு உள்ளது.

மேலும், பகலில் அனல் காற்று வீசக் கூடும் என்பதால் மக்கள் கவனமுடன் இருப்பது அவசியமாகும்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.