‘பல்லக்கை நானே தூக்குவேன்‘ – தருமபுரம் ஆதினம் பட்டின பிரவேசம் குறித்து அண்ணாமலை அதிரடி

திமுகவின் இந்த ஓர் ஆண்டு சாதனை என்பதனை விட சோதனை என்று தான் சொல்ல வேண்டும் எனவும், அதற்கு இந்த சந்திப்பில் ஏற்பட்ட மின் வெட்டே சாட்சி என்றும் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை பேட்டியளித்துள்ளார்.
சென்னை தி நகரில் உள்ள தமிழக பாஜக தலைமை அலுவலகமான கமலாலயத்தில், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “நான்கு நாட்கள் இலங்கை தீவுக்கு பயணம் மேற்கொண்டேன். மேலும் மே 1-ம் தேதி நடைபெற்ற மே தின பேரணியில் பங்கேற்றேன். இலங்கையில் வாழும் தமிழ் சொந்தங்களுக்கு மத்திய அரசு சார்பில், 4 ஆயிரம் வீடுகள் கட்டித்தரப்பட்டது. இன்னும் 10 ஆயிரம் வீடுகள் கூடுதலாக வேண்டும் என கோரிக்கை வைத்தனர். அதன் அடிப்படையில் தற்போது மத்திய அரசால் கட்டித்தரப்பட்டுள்ளது.
இலங்கை பொருளாதார நெருக்கடியில் உள்ளது. இதன் காரணமாக 1.5 பில்லியன் இந்தியா அரசு இலங்கை அரசுக்கு வழங்கியுள்ளது. அதுமட்டுமில்லாமல் அரிசி, காய்கறி மற்றும் மருத்துவம், பெட்ரோலியம் உள்ளிட்டவை இந்திய அரசு சார்பில் அனுப்பப்பட்டுள்ளது. மேலும் இலங்கையில் தமிழ் சார்ந்த கட்சி தலைவர்களுக்கு பாரதிய ஜனதா கட்சி சார்பில் பல்வேறு கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
image
தருமபுரம் ஆதினம் பட்டின பிரவேசம் விவகாரத்தில், அரசியல் உள் நோக்கம் உள்ளது. ஏன் அரசு திடீரென தடை விதிக்க வேண்டும். சட்டப்பேரவையில் பாஜக இதனை தெளிவாக எடுத்துரைத்துள்ளோம். அரசு இதனை பரிசீலிக்கும் என நம்புகிறோம். கூலிக்காக அல்லது இழிவாக இருந்து ஒருவரை தூக்குவது தவறு. அதனை பாஜக விரும்பவில்லை. ஆனால் குரு என்பவர் கடவுளுக்கு சமமானவர்.
எனவே, அவரை தூக்குவது தவறு இல்லை. ஐந்து முறை முதலமைச்சர் ஆக இருந்த கலைஞர் இதனை தடை செய்யவில்லை. ஆனால், ஸ்டாலின் அரசு தடை செய்வதன் அவசியம் என்ன? பட்டின பிரவேசம் கண்டிப்பாக நடைபெறும். நானே போய் பல்லக்கை தூக்குவேன். ஆசை, பற்று அனைத்தையும் தாண்டியவர்கள் குருமார்கள். இவர்களை தமிழக அரசு மிரட்டுகிறது. அதுமட்டுமில்லாமல் அவர்களுக்கு எதிராக செயல்பட்டு வருகிறது. இதனை உடனடியாக முதல்வர் கைவிட வேண்டும். அதுமட்டுமின்றி முதலமைச்சர் முன் நின்று, இந்தப் பட்டின பிரவேசம் நடத்த வேண்டும் என்பது எனது கோரிக்கை.
image
திமுகவின் இந்த ஓர் ஆண்டு சாதனை என்பதனை விட சோதனை என்று தான் சொல்ல வேண்டும். அதற்கு இந்த சந்திப்பில் ஏற்பட்ட மின் வெட்டே சாட்சி. தமிழ்நாட்டில் மின் வெட்டு என்று சொன்னாலே வழக்கு போடுகின்றனர். தமிழ்நாட்டில் காவல்நிலையத்தில் வாரதிற்கு ஒரு முறை கொலை நடக்கிறது(Lockup death). இது தொடர்பான வழக்கு சிபிசிஐடி-க்கு மாற்றப்பட்டுள்ளதாக காவல்துறை இயக்குநர் கூறுகிறார். ஆனால், இதனால் என்ன பலன் கிடைத்துள்ளது எந்த குற்றவாளிகளையும் கண்டறியப்படவில்லை.
அதே போல் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் வீடுகளில், பல முறை இந்த அரசு சோதனை நடத்தியது. ஆனால் இதுவரை யார் மீதும் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யவில்லை (charge sheet). கிழக்கு கடற்கரை சாலை மத்திய நெடுஞ்சாலை துறை பராமரிப்பில் உள்ளது. இந்த சாலைக்கு கலைஞர் கருணாநிதி பெயர் வைப்பதை விட G square சாலை என பெயரிடுவதே பொருத்தமாக இருக்கும்.
ஏனெனில் இந்த நிறுவனத்தின் விளம்பரம் தான் சாலையின் இருபுறமும் 10 அடிக்கு ஒன்று உள்ளது. மாநில அரசு பராமரிக்கும் ஒரு நல்ல சாலைக்கு கலைஞர் பெயர் வைக்கட்டும். அதில் மாற்று கருத்து இல்லை. கிழக்கு கடற்கரை சாலைக்கு அவர் பெயர் வைத்து அவரை களங்கப்படுத்த வேண்டாம். பாஜக நிர்வாகியாக இருந்த கே.டி.ராகவன் மீது பாலியல் விவகாரம் தொடர்பாக, பாஜக சார்பில் அமைக்கப்பட்ட விசாரணை கமிட்டியிடம் இது வரை யாரும் புகார் அளிக்கவில்லை .புகார் அளிக்கும் பட்சத்தில் அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும்” இவ்வாறு அவர் தெரிவித்தார்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.