பாலியல் வன்கொடுமை புகார் அளிக்கச் சென்ற சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த காவலர் – உ.பி அதிர்ச்சி!

உத்தரப்பிரதேச மாநிலத்தில் 13 வயது சிறுமி ஒருவர் 4 பேர் கொண்ட கும்பலால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார். இந்த விவகாரம் தொடர்பாக லலித்பூர் காவல்நிலையத்திற்கு புகாரளிக்க சென்ற அந்த சிறுமியை, காவல் நிலைய அதிகாரி திலக்தாரி சரோஜ் என்பவர், பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படுகிறது. இந்த விவகாரம் தொடர்பாக உ.பி-யில் ஆளும் பா.ஜ.க மாநில அரசை, எதிர்க்கட்சித் தலைவர்கள் கடுமையாக சாடியுள்ளனர். மாநிலத்தில் இந்தச் சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது.

இந்த நிலையில, இந்தச் சம்பவம் தொடர்பாக காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில், “13 வயது பெண் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதைத் தொடர்ந்து, இது குறித்து புகார் அளிக்க காவல் நிலையத்துக்குச் சென்றபோது, காவல் நிலைய அதிகாரி ஒருவரால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுள்ளார். நேர்மையாய் இருக்க வேண்டிய சட்டம் ஒழுங்கு, புல்டோசர்களால் நசுக்கப்படுகிறது என்பது இதன் மூலமாக தெரிகிறது. காவல் நிலையங்கள் பெண்களுக்கு பாதுகாப்பாக இல்லை என்றால் அவர்கள் புகார் அளிக்க எங்கே செல்வார்கள்? இதுபோன்ற சம்பவங்களைத் தடுக்கவும், பெண்களின் பாதுகாப்பிற்காகவும், அவர்களுக்கு உகந்த சட்ட அமைப்பை ஏற்படுத்தி கொடுத்து, தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்’’ எனப் பதிவிட்டுள்ளார்.

இந்தச் சம்பவத்தில் குற்றம்சாட்டப்பட்டிருக்கும் காவல் நிலைய அதிகாரி திலக்தாரி கைது செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.