வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
லண்டன் : ஐரோப்பிய நாடான பிரிட்டனின் ராணி எலிசபெத்தின் பாதுகாப்பு வீரர்கள் தங்கியிருக்கும் இடத்தில், பாதிரியார் என கூறி ஒருவர் நுழைந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த குளறுபடி பற்றி, பிரிட்டன் ராணுவம் விசாரணையை துவக்கியுள்ளது.
லண்டனின் பக்கிங்ஹாம் அரண்மனையில் எப்போதும் தங்கியிருக்கும் பிரிட்டன் ராணி இரண்டாம் எலிசபெத், 96, தற்போது, சண்டிரிங்ஹாம் எஸ்டேட்டில் தங்கியுள்ளார். இவரது பாதுகாப்பு வீரர்கள், லண்டன் ஷீட் தெருவில் உள்ள விக்டோரியா குடியிருப்பில் தங்கியுள்ளனர். இதற்குள் ராணுவத்தினர் தவிர அன்னியர் யாரும் நுழைய முடியாது.
சமீபத்தில், இந்த குடியிருப்புக்குள் பாதிரியார் ஒருவர் நுழைந்துள்ளார். தன்னை ராணுவ உயர் அதிகாரிகளின் நண்பர் என தெரிவித்ததை அடுத்து, காவலர்கள் எந்த சோதனையும் நடத்தாமல், அவரை குடியிருப்புக்குள் அனுமதித்துள்ளனர். அங்கு ராணுவ வீரர்களுடன் மது குடித்து, உணவு சாப்பிட்டு, அங்கேயே இரவில் தங்கியுள்ளார்.
மறுநாள் அங்கிருந்து அவர் சென்ற பின் தான், ராணுவ உயர் அதிகாரிகள் யாருக்கும் அவரை தெரியவில்லை என்பது தெரிய வந்தது. இதையடுத்து, ராணியின் பாதுகாப்பு வீரர்களுடன் அன்னியர் ஒருவர் தங்கியிருந்தது, பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த பாதுகாப்பு குளறுபடி பற்றி, பிரிட்டன் ராணுவம் விசாரணையை துவக்கியுள்ளது.
Advertisement