59-ல் 29 பேர் அண்ணாமலை ஆதரவாளர்களா… அதிருப்தியில் சீனியர்கள்! – என்ன நடக்கிறது தமிழக பாஜக-வில்?

தமிழக பாஜக மாநிலத் தலைவராக அண்ணாமலை பொறுப்பேற்றதில் இருநந்தே அதிரடிகளுக்குப் பஞ்சமில்லாமல் சென்றுகொண்டிருக்கிறது கட்சி. புதிதாக 59 மாவட்டத் தலைவர் நியமனம் தொடர்பாகவும் கட்சிக்குள் முணுமுணுப்புச் சத்தம் கேட்கிறது. இதுதொடர்பாக நம்மிடம் பேசிய மாவட்டத் தலைவர் ஒருவர், “அண்ணாமலை தலைவரானதில் இருந்து கட்சியில் சீனியர்கள் ஒருபக்கமாக ஒன்றுதிரண்டுவிட்டார்கள். எனினும், தலைவராகத் தனக்கிருக்கும் அதிகாரத்தைப் பயன்படுத்தி, கட்சிக்குள் அதிரடிகளைச் செய்துகொண்டிருக்கிறார் அண்ணாமலை. சமீபத்தில் இரண்டு தவணையாக 16 மாவட்ட நிர்வாகத்தைக் கலைத்தார் அண்ணாமலை. அடுத்ததாகத் தற்போது கட்சி அமைப்பு ரீதியாக உள்ள 59 மாவட்டங்களுக்கும் தலைவர்களை நியமித்திருக்கிறார்கள்.

மாவட்டத் தலைவர்கள் நியமன அறிக்கை

அந்த 59 பேரில் 29 மாவட்டத் தலைவர்கள் அண்ணாமலை ஆதரவாளர்களாம். தான் தலைவராக இருப்பதால், எப்படியும் 50 மாவட்டத் தலைவர் பதவியையாவது பிடித்துவிட வேண்டுமென அண்ணாமலை கடுமையான முயற்சிகள் செய்தார். ஆனால், டெல்லி அதற்கு ஒப்புக்கொள்ளவில்லை. எப்படியோப் பேசி 29 பேரைக் கொண்டுவந்துவிட்டார்.

இதேபோல, மாற்றுக் கட்சியிலிருந்து வந்தவர்களுக்கும் பொறுப்புகளைக் கொடுக்க முடியவில்லை. அ.தி.மு.க-விலிருந்து வந்த சோழவந்தான் மாணிக்கத்துக்கு முதலில் மதுரையில் ஒரு மாவட்டத் தலைவர் பதவி கொடுக்கப்பட இருந்தது. ஏற்கெனவே அங்கு கோலோச்சுபவர் அதற்கு சம்மதிக்கவில்லை.

தமிழக பாஜக தலைவராக பொறுப்பேற்ற அண்ணாமலை!

அதனால், தென்காசி மாவட்டத்தில் ஒன்றினைக் கொடுக்க முடிவெடுத்தார் அண்ணாமலை. அங்கு நயினார் நாகேந்திரன் பிரச்னை செய்ததால் அதுவும் கைகூடாமல் போய்விட்டது. இதனால், மாற்றுக்கட்சியினர் அண்ணாமலையை நம்பி கட்சிக்குள் வருவதற்குத் தயக்கம் காட்டத் தொடங்குவார்கள்.

அடுத்து, மாவட்டத் தலைவர் பொறுப்புகள் கிடைக்கப்பெறாதவர்கள் வரக்கூடிய 2024 நாடாளுமன்றத் தேர்தலில் எம்.பி சீட் எதிர்பார்த்துக் காத்திருக்கிறார்கள். அண்ணாமலையும் தனது ஆதரவாளர்களுக்கு என சீட் புக் செய்கிறார். 29 மாவட்டத் தலைவர்களை தனது ஆதரவாளர்களாகப் பார்த்து நியமித்தது போதாதென்று எம்.பி சீட்டுக்கும் குறிவைத்திருப்பது சீனியர்கள் மத்தியில் கொதிநிலையை ஏற்படுத்தியிருக்கிறது. அண்ணாமலையைப் பொறுத்தவரை அ.தி.மு.க-விடம் 15 எம்.பி தொகுதிகளைப் பெற்றுக்கொண்டு, அதில் 7-ல் கண்டிப்பாக ஜெயிக்க வேண்டும் என்பதுதான் எண்ணம்.

முதலில் அ.தி.மு.க 15 தொகுதிகளைக் கொடுக்குமா என்பதே சந்தேகம். ஏனெனில், 2019 எம்.பி தேர்தலில் வெறும் 5 தொகுதியைத்தான் ஒதுக்கியது. மாவட்டத் தலைவர்களாக நியமிக்கப்பட்ட 29 அண்ணாமலை ஆதரவாளர்கள் எம்.பி சீட் கேட்கக் கூடாது என்று சீனியர் தரப்பு முஷ்டி முறுக்குகிறது. எனினும் எதையும் கண்டுகொள்ளாத அண்ணாமலை, அடுத்ததாக மாநில நிர்வாகிகளின் பட்டியலுக்கும் டெல்லியிடம் ஓ.கே வாங்கிவிட்டதாகத் தெரிகிறது. இன்னும் சில நாள்களில் அதுகுறித்த அறிக்கை வெளிவரும்” என்றார்.

நரேந்திரன்

இந்த உட்கட்சி விவகாரங்கள் குறித்து தமிழக பா.ஜ.க துணைத் தலைவர் நரேந்திரனிடம் பேசினோம். “59 மாவட்டத் தலைவர்கள் நியமனம் என்பது உட்கட்சி விவகாரம். சில இடங்களில் மாற்ற வேண்டிய தேவை இருந்ததால் மாற்றி அமைத்துள்ளனர். நடந்து முடிந்த தேர்தல்களில் நிர்வாகிகளின் செயல்பாடுகளைக் கணக்கிட்டுதான் இந்த நியமனம் நடைபெற்றுள்ளது. இதில் ஒவ்வொருவருக்கும் தனி ஆதரவாளர்கள் என்றெல்லாம் எதுவுமில்லை. எல்லோருமே பா.ஜ.க-வின் ஆதரவாளர்களே! அடுத்த, இரண்டு தேர்தல்கள் இவர்களைக் கொண்டுதான் சந்திக்க இருக்கிறோம்” என்றார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.