FACT CHECK: சீனப் பெண் தூதருடன் பார்ட்டியில் கலந்து கொண்டாரா ராகுல்?

காங்கிரஸ் மூத்த தலைவர்
ராகுல் காந்தி
வெளிநாட்டு நைட் கிளப் ஒன்றில் அவர் பார்ட்டியில் கலந்து கொண்டது போன்ற வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், ராகுல் காந்தி பெண் ஒருவருடன் பேசிக் கொண்டிருப்பது போன்றும், செல்போனை இயக்குவது போன்றும் உள்ளது.

பரவும் செய்தி

ராகுல் காந்தியுடன் இருக்கும் பெண் நேபாள நாட்டுக்கான சீன தூதர்
ஹூ யாங்கி
எனவும், நேபாள முன்னாள் பிரதமர் ஷர்மா ஒலியை ஹனிட்ராப்பில் (பாலியல் வலை வீசி அதில் சிக்கும் வைத்து மிரட்டுவது) சிக்க வைத்தவர் தான் ஹூ யாங்கி எனவும் பலவாறான கருத்துகள் வாட்ஸ் அப், ஃபேஸ்புக், ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பரப்பப்பட்டு வருகிறது. இதனை தங்களது பக்கத்தில் பகிரும் பலரும் ராகுல் காந்தியை கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

உண்மை என்ன

சமூக வலைதளங்களில் பகிரப்படும் அந்த புகைப்படம், தகவலின் உண்மைத்தன்மை குறித்து சமயம் தமிழின் உண்மை கண்டறியும் குழு ஆய்வு மேற்கொண்டது. அதில் அந்த தகவல் போலியானது என்று தெரிய வந்துள்ளது. ராகுல் காந்தி பேசிக் கொண்டிருக்கும் பெண் நேபாள நாட்டுக்கான சீன தூதர் ஹூ யாங்கி இல்லை எனவும் தெரிய வந்துள்ளது.

சரிபார்ப்பு வழிமுறை

ராகுல் காந்தியின் பயணம் தொடர்பாக காங்கிரஸ் பொதுச் செயலாளர் ரன்தீப் சுர்ஜேவாலா கூறுகையில், நண்பர் ஒருவரின் திருமண நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக நட்பு நாடான நேபாளத்திற்கு தனிப்பட்ட முறையில் ராகுல் காந்தி சென்றுள்ளார். அவரது நண்பர் ஒரு பத்திரிகையாளர் என்று தெரிவித்துள்ளார்.

மேலும், ராகுல் காந்தியின் நேபாள பயணம் குறித்து அந்நாட்டு பத்திரிகையான காத்மாண்டு போஸ்ட் செய்தி வெளியிட்டுள்ளது. அதில், “காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கடந்த திங்கள் கிழமை மாலை விஸ்தாரா விமானம் மூலம் மாலை 4.40 மணியளவில் நேபாளத் தலைநகர் காத்மாண்டு வந்ததாகவும், அவருடன் மூன்று பேர் வந்ததாகவும் பாதுகாப்பு அதிகாரிகள் வட்டாரத் தகவல்கள் உறுதி படுத்தியுள்ளன. ராகுல் காந்தியும் அவரது நண்பர்களும் காத்மாண்டு மேரியாட் ஹோட்டலில் தங்கியுள்ளதாக அந்த தகவல்கள் தெரிவித்துள்ளன. பத்திரிகையாளரான சும்னிமா உடாஸின் திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக அவர் வந்துள்ளார்.” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், சும்னிமா உடாஸ் – நிமா மார்டின் ஷெரபா ஆகியோரின் திருமணம் செவ்வாய்கிழமை நடைபெறுகிறது. அவர்களது திருமண வரவேற்பு மே 5ஆம் தேதி ஹயாத் ரீஜன்ஸி ஹோட்டலில் நடைபெறுகிறது. திருமணத்தில் கலந்து கொள்ள சும்னிமா உடாஸின் குடும்பத்தினர் ராகுல் காந்தியை அழைத்துள்ளதாக மியான்மருக்கான நேபாள தூதராக இருக்கும் சும்னிமா உடாஸின் தந்தை பீம் உடாஸ் தெரிவித்துள்ளார். திருமணத்தில் கலந்து கொள்ள இந்தியாவை சேர்ந்த வேறு சில விவிஐபிகளும் வந்துள்ளனர் என்று அவர் தெரிவித்துள்ளார் என்றும் காத்மாண்டு போஸ்ட் செய்தி வெளியிட்டுள்ளது.
அந்த செய்தியை படிக்க இங்கு க்ளிக் செய்யவும்.

அதேபோல், சமூக வலைதளங்களில் பரப்பப்பட்டு வரும் தகவல் தொடர்பாக கூகுள் தேடலில் தேடிய போது, அது தொடர்பான பல செய்திகள் கிடைக்கின்றன. அதன்படி, வைரலாகும் வீடியோவில் பார்க்கப்படும் நைட்கிளப் நேபாளத் தலைநகர் காத்மாண்டுவில் உள்ள பிரபலமான Lord of The Drinks எனும் பப் ஆகும்.

இந்த பப் நிர்வாகத்தை தொடர்பு கொண்டு இதுபற்றிய விவரம் கேட்டதாக இந்தியா டுடே செய்தி இணையதளம் செய்தி வெளியிட்டுள்ளது. அதில், மே 2ஆம் தேதி 5 முதல் 6 பேருடன் ராகுல் காந்தி தங்களது பப்பிற்கு வந்ததாக Lord of The Drinks பப்-இன் தலைமை செயல் அதிகாரி ராபின் ஸ்ரீஸ்தா தெரிவித்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், ராகுல் காந்தியுடன் சீனத் தூதர் யாரும் வரவில்லை என்றும் அவர் உறுதிபடுத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. “ராகுல் காந்தி இங்கு ஒன்றரை மணி நேரம் இருந்தார். அது அவருடைய தனிப்பட்ட வருகை. சீன தூதரகத்தில் இருந்து யாரும் அவருடன் இல்லை.” என்று ராபின் ஸ்ரீஸ்தா இந்தியா டுடேவிடம் தெரிவித்துள்ளார்.

வைரலான வீடியோவில் ராகுல் காந்தியுடன் காணப்பட்ட பெண்ணின் அடையாளம் குறித்து விசாரித்தபோது, திருமண விழாவிற்கு அழைக்கப்பட்ட மணமகளின் தோழி தான் அவர் என்றும், நிச்சயமாக, அவர் சீனத் தூதர் அல்ல என்றும் ராபின் ஸ்ரீஸ்தா தெரிவித்துள்ளதாக இந்தியா டுடே தெரிவித்துள்ளது.
அந்த செய்தியை படிக்க இங்கு க்ளிக் செய்யவும்.

அதேபோல், “ராகுல் காந்தி மணமக்களின் நண்பர்களுடன் பப்பில் இருந்தார். அவருடன் இருந்த அந்தப் பெண் நிச்சயமாக சீனத் தூதர் அல்ல. மணப்பெண்ணின் தோழியான அவர் நேபாளப் பெண்.” என்று நேபாள நாட்டை சேர்ந்த பத்திரிகையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

முடிவு

எனவே, ராகுல் காந்தி தனது நண்பரின் திருமண விழாவில் கலந்து கொள்ள நேபாளர் சென்றுள்ளார். காத்மாண்டுவில் உள்ள Lord of The Drinks பப்பிற்கு நண்பர்களுடன் அவர் சென்றுள்ளார். அவர் பேசிக் கொண்டிருந்த பெண் நேபாள நாட்டுக்கான சீன தூதர் ஹூ யாங்கி இல்லை எனவும் தெரியவந்துள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.