இலங்கை போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான அனைத்து பஸ்களும் நாளை வழமையான முறையில் சேவையில் ஈடுபடும் என இலங்கை போக்குவரத்துச் சபை தெரிவித்துள்ளது.
அனைத்து தொழிற்சங்கங்களுடன் மேற்கொண்ட கலந்துரையாடலின் பின்னர் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டதாக அதன் தலைவர் கிங்ஸ்லி ரணவக்க தெரிவித்தார். நாளை போக்குவரத்தில் ஈடுபடும் அனைத்து பஸ்களுக்கும் தேவையான பாதுகாப்பை வழங்குமாறு உரிய பிரிவினரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ஐயாயிரத்து 200 பஸ் வண்டிகள் சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளன. இதில் ஆயிரத்து 500 பஸ் வண்டிகள் தூர இடங்களுக்காக இணைத்துக் கொள்ளப்படவுள்ளதாக இலங்கை போக்குவரத்துச் சபையின் தலைவர் கிங்ஸ்லி ரணவக்க தெரிவித்தார்.
இதேவேளை, தனியார் பஸ் வண்டிகள் நாளை போக்குவரத்தில் ஈடுபட மாட்டாதென தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது. எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக எதிர்வரும் நாட்களில் பஸ் போக்குவரத்தை மேற்கொள்ள முடியாத நிலை ஏற்படும் என தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார். அத்தியாவசிய சேவைகளுக்காக மாத்திரம் பஸ்கள் சேவையில் ஈடுபடவுள்ளன.