கலிபோர்னியா: ‘நீங்கள் படித்த பள்ளி எது?’ என்று விக்கிப்பீடியா திருத்தங்களை மேற்கோள் காட்டி கேட்கப்பட்ட கேள்விக்கு, கூகுள் தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சை பதிலளித்துள்ளார்.
தொழில்நுட்ப உலகின் சாம்ராட்டாக இயங்கி வருகிறது கூகுள். அதன் தலைமை செயல் அதிகாரியாக இயங்கி வருகிறார் தமிழ்நாட்டை சேர்ந்த சுந்தர் பிச்சை. 49 வயதான அவர் படித்து, வளர்ந்தது தமிழ்நாட்டில்தான். பள்ளிப் படிப்பை தமிழகத்திலும், பட்டப்படிப்பை கரக்பூர் ஐஐடி-யிலும், மேற்படிப்பை அமெரிக்காவிலும் முடித்தவர். கடந்த 2004-இல் கூகுள் நிறுவனத்தில் இணைந்தார்.
இந்நிலையில், அண்மையில் அவர் பேட்டி ஒன்றில் பங்கேற்றார். அந்தப் பேட்டியில் விக்கிப்பீடியாவில் நீங்கள் படித்த பள்ளி பல முறை திருத்தம் செய்யப்பட்டுள்ளது. இதில் ‘நீங்கள் படித்த சரியான பள்ளி எது என சொல்ல முடியுமா?’ என நெறியாளர் கேட்டிருந்தார். அதற்கு சுந்தர் பிச்சை அளித்த பதில்:
”இதில் உள்ளதில் இரண்டு பள்ளிகளில் நான் படித்தேன். கடைசியாக நான் மெட்ராஸ் ஐஐடி வளாகத்தில் உள்ள வனவாணி பள்ளியில் படித்தேன்” என தெரிவித்துள்ளார்.
அதோடு, ‘எட்டு வயதில் ஐஐடி-யில் சேர நினைத்தாரா?’ என்று கேட்டதற்கு அவர் ‘இல்லவே இல்லை’ எனவும் குறிப்பிட்டுள்ளார்.
இந்தியாவில் வளர்ந்த அவர், ஆரம்ப நாட்களில் தனது வாழ்வில் தொழில்நுட்ப அணுகல் எப்படி இருந்தது என்பதையும் பகிர்ந்திருக்கிறார். ஒரே ஒரு தொலைபேசி மூலம் தான் கண்ட மாற்றத்தையும் அவர் விவரித்துள்ளார்.