இலங்கை பார்லிமென்ட் நள்ளிரவில் முற்றுகை| Dinamalar

கொழும்பு:நேற்று முன்தினம் நள்ளிரவில், இலங்கை பார்லிமென்ட் கட்டடத்திற்கு வெளியே ஏராளமானோர் திரண்டு அரசுக்கு எதிராக போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
நம் அண்டை நாடான இலங்கை, அன்னியச் செலாவணி பற்றாக்குறை, விலைவாசி உயர்வு, எரிபொருள் தட்டுப்பாடு, மின் வெட்டு, அத்தியாவசியப் பொருட்கள் சப்ளை பாதிப்பு உள்ளிட்ட பிரச்னைகளை சந்தித்துள்ளது.இதையடுத்து, இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே, பிரதமர் மகிந்தா ராஜபக்சே இருவரும் பதவி விலகக் கோரி, பொதுமக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

அதிபர் அலுவலகத்திற்கு வெளியே, போராட்டக்காரர்கள் ஒரு மாதமாக முற்றுகையிட்டு உள்ளனர்.ஆனால், ராஜபக்சே சகோதரர்கள் பதவி விலக மறுத்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று முன்தினம் பார்லி., துணை சபாநாயகர் தேர்தல் நடந்தது. அதில் கூட்டணியில் இருந்து விலகி, துணை சபாநாயகர் பதவியை ராஜினாமா செய்தவர் மீண்டும் போட்டியிட்டு, ஆளும் கட்சி ஆதரவுடன் வெற்றி பெற்றார். இது, கோத்தபய ராஜபக்சேவுக்கு பார்லி.,யில் பெரும்பான்மை பலம் உள்ளதை நிருபிப்பதாக இருந்தது.
இதையடுத்து, நேற்று முன்தினம் இரவு ஏராளமான மாணவர்கள், தொழிற்சங்கத்தினர் பார்லி.,யை முற்றுகையிட்டு அரசுக்கு எதிராக முழக்கங்கள் எழுப்பினர். இந்த போராட்டத்திற்கு பொதுமக்களும் குடும்பம் குடும்பமாக வந்து ஆதரவு தெரிவித்தனர்.திடீரென ஆயிரக்கணக்கானோர் பார்லி., வளாகத்தில் குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

உடனே ஏராளமான போலீசார் அங்கு குவிக்கப்பட்டனர். இந்நிலையில், இலங்கை அரசு மீது அடுத்த வாரம் நம்பிக்கையில்லா தீர்மானத்தை தாக்கல் செய்ய உள்ளதாக, எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசா நேற்று தெரிவித்தார்.இலங்கையில் முழு அடைப்புஇலங்கை அரசுக்கு எதிராக தொழிற்சங்கங்கள் நேற்று முழு அடைப்பு போராட்டம் நடத்தின. ஆயிரக்கணக்கான பள்ளிகள், கடைகள், வணிக நிறுவனங்கள் மூடப்பட்டிருந்தன.

தனியார் பஸ் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. சொற்ப அளவில் அரசு பஸ்கள் இயக்கப்பட்டன. ரயில் ஓட்டுனர்களும் முழு அடைப்பில் பங்கேற்றதால் ரயில் சேவை பாதிக்கப்பட்டது. இலங்கையின் பல பகுதிகள் வெறிச்சோடிக் காணப்பட்டன.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.