'எவ்வளவோ கெஞ்சினேன் ஆனா, என் கண் முன்னாடியே கொன்னுட்டாங்க' – ஹைதராபாத் பெண் கதறல்

“உயிருடன் விட்டுவிடுமாறு நான் எவ்வளவு கெஞ்சியும், என் கண் முன்னாலேயே எனது கணவரை கொன்றுவிட்டார்களே” என காதல் திருமணம் செய்த பெண் கதறி அழுதது அனைவரையும் உருக்கமடைய செய்துள்ளது.
தெலங்கானா மாநிலம் செகந்திராபாத் பகுதியைச் சேர்ந்தவர் பில்லாபுரம் நாகராஜ் (25). பட்டியலின வகுப்பைச் சேர்ந்தவரான இவர், ஹைதராபாத்தில் உள்ள கார் ஷோரூமில் சேல்ஸ் மேனாக பணிபுரிந்து வந்தார். இந்நிலையில், அதே பகுதியைச் சேர்ந்த சையது அஷ்ரின் சுல்தானா என்ற முஸ்லிம் பெண்ணை காதலித்து வந்த நாகராஜ், கடந்த ஜனவரி மாதம் திருமணம் அவரை செய்து கொண்டார். பெண் வீட்டாரின் கடும் எதிர்ப்பையும் மீறி இந்த திருமணம் நடைபெற்றதாக கூறப்படுகிறது.
image
இந்த சூழலில், நாகராஜ் நேற்று முன்தினம் இரவு தனது மனைவி சுல்தானாவுடன் மோட்டார் சைக்கிளில் வந்துக் கொண்டிருந்த போது, சுல்தானாவின் சகோதரர் மொபின் அகமது மற்றும் அவரது நண்பர் முகமது மசூத் ஆகியோர் நாகராஜை வெட்டிக் கொலை செய்தனர். இந்த செய்தி நேற்று வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், நாகராஜ் கொலை செய்யப்படும் போது, அவரது மனைவி சுல்தானா அவரை காப்பாற்ற முயன்ற வீடியோ வெளியாகியுள்ளது. அந்த வீடியோவில், நாகராஜ் மீது வெட்டுப்படாமல் இருக்க அவர் மீது சுல்தானா விழுகிறார். ஆனால், அவரது சகோதரும், நண்பரும் சுல்தானாவை அங்கிருந்து தள்ளிவிட்டு நாகராஜை கத்தியால் தாக்குகின்றனர். அப்போது சுல்தானா, தனது சகோதரர் மொபினிடம் நாகராஜை விட்டுவிடுமாறு கெஞ்சுகிறார். ஆனால் சற்றும் மனம் இறங்காத மொபின், நாகராஜை சரமாரியாக தாக்குதிறார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
image
இதனிடையே, இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசிய சுல்தானா, “என்னை திருமணம் செய்து கொண்டால் எனது சகோதரர்கள் உன்னை கொலை செய்து விடுவார்கள் என ஏற்கனவே நாகஜாரிடம் கூறினேன். ஆனால், அவர் வாழ்ந்தாலும், இறந்தாலும் உன்னோடுதான் இருப்பேன் எனக் கூறினார். இப்போது நான் பயந்ததை போலவே நடந்துவிட்டது. நாகராஜை விட்டுவிடுமாறு எவ்வளவு கெஞ்சியும் என் கண் முன்னாலேயே அவரை கொன்றுவிட்டார்கள். நாகராஜ் கொலை செய்யப்படும் போது நூற்றுக்கும் மேற்பட்டோர் வேடிக்கை பார்த்தனர். ஒருவர் கூட உதவிக்கு வரவில்லை. அவ்வாறு யாராவது உதவ முன்வந்திருந்தால், இன்று எனது கணவர் உயிருடன் இருந்திருப்பார். நாகராஜை கொலை செய்த என் சகோதரர் உள்ளிட்டோருக்கு கடும் தண்டனை கிடைக்க வேண்டும்” என்றார்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.