டெல்லி நிர்வாக அதிகாரம் யாருக்கு? அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றி உச்ச நீதிமன்றம் உத்தரவு

தலைநகர் டெல்லியின் நிர்வாக அதிகாரம் யாருக்கு என்பது குறித்தான வழக்கை 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
டெல்லியில் நிர்வாக அதிகாரம் தொடர்பாக மத்திய அரசு மற்றும் டெல்லி அரசுக்கு இடையே தொடர் மோதல்கள் இருந்து வருகின்றன. ஏற்கனவே கடந்த 2018-ம் ஆண்டு காவல்துறை மற்றும் பொது அமைதி ஆகியவை தவிர மற்ற அனைத்து துறைகளும் டெல்லி அரசாங்கத்திடம் சார்ந்தது என உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்வு தீர்ப்பு வழங்கியிருந்தது. அதன் பிறகு, அதிகாரப்பகிர்வு தொடர்பாக மத்திய அரசு முக்கியமான சட்டத் திருத்தங்களை மேற்கொண்டது; இதற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் டெல்லி அரசு மனு தாக்கல் செய்திருந்த நிலையில், மனு மீதான விசாரணை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வில் நடைபெற்று வந்தது.
image
இதற்கிடையில், இந்த மனுக்களை அரசியல் சாசன அமர்வுக்கு மாற்ற வேண்டும் என மத்திய அரசு தனியாக மனு தாக்கல் செய்தது. இதனை விசாரித்த உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு, டெல்லியின் அதிகாரம் தொடர்பான விவகாரத்தில் மத்திய அரசுக்கும் டெல்லி அரசுக்கும் இடையே இருக்கக்கூடிய பிரச்சனைகளை உச்ச நீதிமன்றத்தின் 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றுவதா, வேண்டாமா என்பது குறித்த உத்தரவை தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்தது.
image
இந்நிலையில், இவ்வழக்கில் இன்று உத்தரவு பிறப்பித்த தலைமை நீதிபதி என்.வி ரமணா, டெல்லியின் நிர்வாக அதிகாரங்களை கட்டுப்படுத்தும் அதிகாரம் டெல்லி அரசுக்கு உள்ளதா அல்லது மத்திய அரசுக்கு உள்ளதா என்பது குறித்த விவகாரத்தை விசாரிக்க 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றுவதாக தெரிவித்தார். மேலும், மே 11-ம் தேதி 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு வழக்கின் விசாரணை தொடங்கும் எனவும் உத்தரவிட்டார்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.