துறவிகள் யாகம்… மர்மப்பெண் தொழுகை… – வாரணாசி கியான்வாபி மசூதிக்குள் நீதிமன்றக் கள ஆய்வால் பதற்றம்

புதுடெல்லி: உத்தரப் பிரதேசம் வாரணாசி சிவில் நீதிமன்ற உத்தரவின்படி, கியான்வாபி மசூதியினுள் இன்று நடைபெறும் கள ஆய்வால் பதற்றம் நீடிக்கிறது. காவித்துண்டுடன் ஒரு மர்மப்பெண் சாலையில் தொழுகை நடத்த, மறுபுறம் ஆய்வின் வெற்றிக்காக காசி விஸ்வநாதர் கோயிலில் துறவிகள் யாகம் நடத்தினர்.

காசி எனும் வாரணாசியில் காசி விஸ்வநாதர் பெயரிலானப் பழம்பெரும் கோயில் மிகவும் புகழ்பெற்றது. இதை முகலாயர் மன்னர் அவுரங்கசீப் இடித்து, அதன் ஒரு பகுதியில் கியான்வாபி மசூதியை கட்டியதாகப் புகார் உள்ளது. எனவே, அயோத்தியிலிருந்த பாபர் மசூதியின் மீதானதை போல் கியான்வாபியிலும் பிரச்சினை உருவாகி வருகிறது. இதன் ஒரு முயற்சியாக மசூதி வளாகச் சுவரின் வெளிப்பகுதியில் சிங்கார கவுவ்ரி மாதா சிலை அமைந்துள்ளது.

இங்கு அன்றாடம் நடைபெற்ற பூசை, பாபர் மசூதி பிரச்சினைக்குப் பின் 1991 முதல் நிறுத்தப்பட்டது. பாதுகாப்பு காரணம் எனக் கூறப்பட்டு வருடம் ஒருநாள் மட்டும் பூசைக்காக அனுமதிக்கப்படுகிறது. இதை மீண்டும் பழையபடி அன்றாடப் பூசைக்கு அனுமதிக்கும்படி ஐந்து பெண்கள் பொதுநல வழக்கு தொடுத்துள்ளனர். வாரணாசியின் சிவில் நீதிமன்றத்தில் கடந்த ஆகஸ்ட் 18, 2021 முதல் நடைபெறும் இவ்வழக்கில், கியான்வாபியினுள் வீடியோ கள ஆய்வு நடத்த கடந்த மாதம் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இதற்கு மசூதியின் நிர்வாகமான அஞ்சுமன் இன்தஜாமியா கமிட்டி எதிர்ப்பு தெரிவித்திருந்தது. இதனால், சுமார் 400 எண்ணிக்கையில் சிறப்புத் தொழுகைக்கு வரும் முஸ்லிம்கள் இன்று சுமார் 3,000 என உயர்ந்தன. இவர்கள் அனைவருக்கும் மசூதியினுள் வெள்ளிக்கிழமை சிறப்புத் தொழுகைக்கு அனுமதிக்கப்படவில்லை. இதன் காரணமாகவும் அப்பகுதியினுள் பதற்றம் எழுந்தது. அதேசமயம், மசூதியின் வாசலின் முன் ஒரு பெண் திடீர் என தொழுகை நடத்தத் தொடங்கினார். கொளுத்தும் வெயிலில் சாலையில் தொழுதவரது, தலையில் காவி நிறத்துணி முக்காடாகப் போர்த்தியிருந்தார்.

இதனால், எழுந்த பெரும் சந்தேகத்தால் அவரது தொழுகைக்குப் பின் போலீஸார் சுற்றி வளைத்தனர். சந்தேகத்திற்குரிய வகையில் பேசியவரின் கைப்பையில், இந்து கடவுள்களின் படங்களும் இருந்துள்ளன. இவரிடம் இருந்த வாக்காளர் அட்டையின்படி அப்பெண்ணின் பெயர் ஆயிஷா பீபீ. சைத்புராவை சேர்ந்த இவர் தன் கணவரால் கைவிடப்பட்டு மனநலம் பாதிக்கப்பட்டுள்ளார். எனவே, ஆயிஷா பீபீயை வாரணாசியின் அரசு மனநல மருத்துவமனையின் சோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளார். இவர் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை தொடர்கிறது.

இதனிடையே, கியான்வாபி மசூதியின் கள ஆய்வு, இந்து தரப்பினருக்கு சாதகமாக வெற்றிபெற யாகம் நடத்தப்பட்டது. இதனால், பதற்றம் உருவாகாமல் அமைதியான முறையில் நடைபெறவும் பூசைகள் நடந்தன. வாரணாசியின் சுமேரு பீடத்தின் ஜகத்குரு சங்கராச்சாரியரான சுவாமி நரேந்தராணந்த் தலைமையில் நடைபெற்ற இந்த சிறப்பு யாகத்தில் துறவிகள் பலரும் கலந்து கொண்டனர். இதுபோன்ற களஆய்வு, கியான்வாபியில் முதன்முறையாக 1937-இல் நடைபெற்றுள்ளது. இதை ஒரு வழக்கிற்காக வாரணாசியின் சிவில் நீதிமன்ற நீதிபதியான எஸ்.பி.சிங் இரண்டு முறை நடத்தியுள்ளார்.

இதையடுத்து, இதேபோன்ற ஒரு வழக்கில் ஆங்கிலேய அரசின் உத்தரவுப்படியும் ஒரு முறை நடைபெற்றுள்ளது. இதில், வரலாறு மற்றும் தொல்லியல் வல்லுநர்களான முனைவர். பரமாத்மா சரண் மற்றும் பேராசிரியர் ஏ.எஸ்.அல்தேக்கர் நடத்தியதாகப் பதிவுகள் உள்ளன.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.