நாடு முழுதும் 65 சிறப்பு ரயில்கள் இயக்கம்| Dinamalar

புதுடில்லி : “ரயில்வே தேர்வு எழுதுபவர்களுக்காக, நாடு முழுதும் 65 சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன,” என, ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.

இது பற்றி அஸ்வினி வைஷ்ணவ் கூறியிருப்பதாவது:
ரயில்வே தேர்வுகள், 9 மற்றும் 10 தேதிகளில் நடக்கின்றன. இதற்காக நாடு முழுதும் பல்வேறு நகரங்களில் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. திருநெல்வேலியில் இருந்து மைசூரு, திருவனந்தபுரத்தில் இருந்து சென்னை உட்பட நாடு முழுதும் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ள நகரங்களுக்கு செல்வதற்கு வசதியாக, 65 சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

இந்த சிறப்பு ரயில்களில் தேர்வர்களுக்கு சலுகை எதுவும் கிடையாது. கட்டணம் செலுத்திதான் பயணம் செய்ய வேண்டும். ரயில்வேயில் உள்ள 7,285 காலியிடங்களுக்கு ஒரு லட்சத்து, 45 ஆயிரத்து,700 பேர் தேர்வு எழுதுகின்றனர். இதற்கான தேர்வு மைய நுழைவுச் சீட்டு சமீபத்தில் வழங்கப்பட்டது. ஏராளமானோருக்கு சொந்த மாநிலத்தில் இருந்து வேறு மாநிலத்தில் தேர்வு மையம் அளிக்கப்பட்டுள்ளது. அவர்கள், தேர்வு மையத்தை மாற்றித் தர வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

51,000 பேருக்கு பயிற்சி
ரயில்வேயில் ‘கர்மயோகி’ என்ற இயக்கம் 2020ல் துவங்கப்பட்டது. இதன் வாயிலாக, பயணியரிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என ரயில்வே ஊழியர்களுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. பயணியரை அன்றாடம் சந்திக்கும் நிலைய மேலாளர், டிக்கெட் பரிசோதகர் உள்ளிட்ட ஊழியர்களுக்கு இப்பயிற்சி அளிக்கப்படுகிறது. இதுவரை எட்டு குழுக்கள் பயிற்சி பெற்றுள்ளன.
நாடு முழுதும் உள்ள 68 கோட்டங்களில் இருந்து 1,000 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டு, பயிற்சி அளிக்கப்பட்டது. அதில் தேர்வு பெற்ற 822 பேர், தங்களுடைய கோட்டத்தில் உள்ள ஊழியர்களுக்கு பயிற்சி அளித்து வருகின்றனர். இதுவரை, 51,000 பேர் பயிற்சி பெற்றுள்ளனர்.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.