பச்சிளம் ஆண் குழந்தையை குப்பை தொட்டியில் வீசிய தாய்| Dinamalar

புதுச்சேரி,-பிறந்து ஒரு நாளே ஆன ஆண் குழந்தையை குப்பை தொட்டியில் வீசிவிட்டு சென்ற கொடூர தாயை போலீசார் தேடுகின்றனர். அரியூர் காலனியை சேர்ந்தவர் மங்கைவரம், 50. இவர், புதுச்சேரி நகராட்சி பகுதியில் துப்புரவு தொழிலாளியாக கடந்த 7 ஆண்டு களாக வேலை செய்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு 3:00 மணியளவில், சின்ன சுப்ராயப்பிள்ளை -லப்போர்த் வீதி சந்திப்பில் துப்புரவு பணியில் ஈடுபட்டார். அங்குள்ள குப்பை தொட்டியை சுத்தம் செய்தபோது திடீரென குழந்தையின் அழுகுரல் கேட்டது. குப்பை தொட்டிக்குள் பார்த்தபோது, கட்டைப்பையில் பிறந்து ஒரே நாளான பச்சிளம் ஆண் குழந்தை உயிருடன் கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.பின், அந்த குழந்தையை தானே வளர்க்க ஆசைப்பட்டு தனது வீட்டுக்கு கொண்டு சென்றார். ஆனால், குழந்தையின் தொப்புள் கொடியில் ரத்தம் தொடர்ந்து கசிந்து கொண்டே இருந்ததால், சிகிச்சை அளிக்க அரியூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு அழைத்து சென்றார்.அங்கு குழந்தையை பரிசோதித்த டாக்டர்கள் மற்றும் நர்சுகள், மங்கைவரத்திடம் விசாரணை நடத்தினர். நடந்த சம்பவத்தை தெரிவித்த அவருக்கு டாக்டர்கள் அறிவுரை கூறி, குழந்தையை சிகிச்சைக்காக ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.தொடர்ந்து, சம்பவம் குறித்து ஒதியஞ்சாலை போலீசில் மங்கைவரம் புகார் செய்தார். போலீசார் வழக்குப் பதிவு செய்து, பச்சிளம் குழந்தையை கட்டைப்பையில் வைத்து குப்பை தொட்டியில் வீசிச் சென்ற கல் மனம் படைத்த கொடூர தாயை தேடுகின்றனர்.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.