சாம்ராஜ் நகர்:சாம்ராஜ்நகர் கனககிரி பாகுபலியின் இரண்டாவது மஹா மஸ்தாபிஷேக ஒன்பது நாள் திருவிழா நிறைவு பெற்றது. திரளான சமண மத பக்தர்கள் பங்கேற்றனர்.
சாம்ராஜ்நகர் மாவட்டம், மலையூர் கிராமத்தில், பிரசித்தி பெற்ற கனககிரி மலை அமைந்துள்ளது. இந்த மலையில், 18 அடி உயர பாகுபலி சிலை 2017 பிப்ரவரியில் நிறுவப் பட்டது. அப்போது, முதல் மஹா மஸ்தாபிஷேகம் நடந்தது.இரண்டாம் முறையாக, ஆறு ஆண்டுகள் கழித்து ஏப்ரல் 28ல் மீண்டும் மஹா மஸ்தாபிஷேக திருவிழா துவங்கியது.
பால், சந்தனம், விபூதி, மஞ்சள், குங்குமம், பஞ்சாமிர்தம் உட்பட 14 வகையான திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டது. சமண மதத்தினர் கொண்டு வந்த 508 கலசங்களில் இருந்த புனித நீர், பக்தர்களாலேயே அபிஷேகம் செய்யப்பட்டது.தினமும் மாலை நேரங்களில், ஆடல், பாடல் என களை கட்டியது.
இறுதி நாளான நேற்று 108 மங்கள பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டது. 108 சமண மத அமோககிர்த்தி மஹாராஜர்கள், கனககிரி புவனகீர்த்தி பட்டாரக சுவாமிகள் அபிஷேகம் செய்து, மஹா மஸ்தாபிஷேகத்தை நிறைவு செய்தனர்.இறுதியாக இரண்டு முனிவர்கள் புனித நீரால் அபிஷேகம் செய்து, பூரணகும்ப மஹா சாந்தி கயிறு அணிவித்தனர்.கர்நாடகா மட்டுமின்றி, தமிழகம், ஆந்திரா, கேரளா, தெலுங்கானா உட்பட பல்வேறு பகுதிகளில் இருந்து திரளான சமண மத பக்தர்கள் பங்கேற்றனர்.
Advertisement