புதுச்சேரி-ராமானுஜரின் 1,005ம் ஆண்டு அவதாரத் திருநாளை முன்னிட்டு ராமானுஜருக்கு சிறப்பு திருமஞ்சனம் நடந்தது.
புதுச்சேரி, செயின்ட் தெரேஸ் வீதியில் பழமையான, அரங்க ராமானுஜர் பஜனை மடம் அமைந்துள்ளது. இங்கு, ஸ்ரீதேவி பூதேவி சமேத அத்தி அனந்த ரங்கநாதர், ராமானுஜர் அருள்பாலிக்கின்றனர். மடத்தில் ராமானுஜரின் 1,005ம் ஆண்டு அவதாரத் திருநாள் நேற்று கொண்டாடப்பட்டது. விழாவை முன்னிட்டு, ராமானுஜருக்கு பால், தயிர், மஞ்சள், சந்தனம் உள்ளிட்ட மங்கள திரவியங்களால் சிறப்பு திருமஞ்சனம் நடந்தது. நல்லாத்தூர் பாகவதர் கோஷ்டியினரின் பிரபந்த சேவையும், ஆண்டாள் அரங்க ராமானுஜர் பஜனை மண்டலி குழுவினரின் பஜனையும் நடந்தது.தொடர்ந்து, ராமானுஜருக்கு தங்கக் கவசம் மற்றும் தங்க கிரீடம் அணிவித்து தீபாராதனையும், காலை 11:30 மணிக்கு, சுவாமி உள்புறப்பாடும் நடந்தது. பல்வேறு பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.விழா ஏற்பாடுகளை, ராமானுஜர் பஜனை மடத்தின் சிறப்பு அதிகாரி அன்புசெல்வன் தலைமையில் அர்ச்சகர் பாலாஜி பட்டாச்சாரியார், தேவநாத சுவாமிகள், கணேஷ் ஆகியோர் செய்திருந்தனர்.
Advertisement