சென்னை: சென்னையில் விசாரணை கைதி விக்னேஷ் மரணம் தொடர்பாக காவலர்கள் 9 பேர் சிபிசிஐடி அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜராகியுள்ளனர்.
சென்னையில் கடந்த ஏப்.18-ம் தேதி பட்டினப்பாக்கம் பகுதியைச் சேர்ந்த சுரேஷ், விக்னேஷ் ஆகிய இருவரும் வந்த ஆட்டோவை கெல்லீஸ் அருகே, காவல்துறையினர் நிறுத்தி சோதனை செய்தனர். ஆட்டோவில் வந்த இருவரிடமும், காவல்துறையினர் விசாரித்த போது, முன்னுக்குப்பின் முரணான தகவல்களை கூறியதால், போலீஸார் அவர்களை சோதனை செய்துள்ளனர். அந்த சோதனையின்போது அவர்களிடம் கஞ்சா, மதுபாட்டில்கள் இருந்தது தெரியவந்தது.
இதனையடுத்து இருவரையும் கைது செய்த போலீஸார், சிறையில் அடைத்தனர். இந்நிலையில், சிறையிலிருந்த விக்னேஷ் கடந்த ஏப்.19-ம் தேதி மரணம் அடைந்தார். விக்னேஷின் இறப்பில் சந்தேகம் இருப்பதாக அவரது குடும்பத்தினர் குற்றம்சாட்டினர்.
இந்த வழக்கின் விசாரணை சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது.
இந்நிலையில் இந்த சம்பவம் குறித்து மரணம் நிகழ்ந்த காவல்நிலையத்தில் விசாரணை நடத்திய சிபிசிஐடி போலீசார், சம்பவத்தின்போது பணியில் இருந்த காவலர்கள் 9 பேர் விசாரணைக்கு ஆஜராக சம்மன் அனுப்பப்பபட்டிருந்தது.
அதன்படி, சிபிசிஐடி அலுலவலகத்தில், காவல் ஆய்வாளர்கள் புகழும் பெருமாள், கணபதி, காவலர்கள் பவுன்ராஜ், முனாப், தீபக், கார்த்திக், தலைமைக் காவலர் குமார், பெண் காவலர் ஆனந்தி, செந்தில்குமார் ஆகியோர் விசாரணைக்கு ஆஜராகியுள்ளனர். இவர்களிடம் சிபிசிஐடி போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.