6-ஆம் பாகத்துக்கு தயாராகும் சிபிஐ கூட்டணி

மம்முட்டி நடிப்பில் சமீபத்தில் சிபிஐ 5 : தி பிரெய்ன் என்கிற படம் வெளியானது. இதற்கு முன்னதாக இந்த படத்தின் நான்கு பாகங்கள் வெளியாகியுள்ள. இந்த நிலையில் தற்போது இந்த ஐந்தாம் பாகம் வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றுள்ளது. வசூல் ரீதியாக தியேட்டர்களிலும் நல்ல ரிசல்ட் காட்டி வருகிறது.

இதையடுத்து இந்தப்படத்தின் ஆறாம் பாகத்திற்கான கதை உருவாக்கம் இந்த வருடமே துவங்கப்பட்டு, படத்தை அடுத்த வருடம் வெளியிடலாம் என மம்முட்டி, இயக்குனர் மது, கதாசிரியர் எஸ்.என்.சுவாமி உள்ளிட்ட மூவர் கூட்டணி தீர்மானித்து உள்ளதாக சொல்லப்படுகிறது.. இரண்டு விஷயங்கள் இதை உறுதி செய்வது போல அமைந்து இருக்கின்றன.

இந்த படத்தின் புரமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டபோது பேசிய மம்முட்டி, “சேதுராம ஐயர் கதாபாத்திரத்தில் இப்படி மர்மமான கொலை, அதில் உள்ள முடிச்சுகளை அவிழ்ப்பது என்கிற பாணியில் இருந்து கொஞ்சம் மாறி, மிகப்பெரிய ஊழல் மற்றும் மிகப்பெரிய கொள்ளை ஆகியவற்றை அவர் கண்டுபிடிப்பது போல ஒரு கதையை உருவாக்குங்கள் என கதாசிரியர் எஸ்.என்.சுவாமியிடம் கேட்டுள்ளேன். ஒருவேளை ஆறாம் பாகம் உருவனால் இந்த விஷயத்தை மையமாக வைத்து தான் உருவாகும் என்று கூறியிருந்தார்.

அதுமட்டுமல்ல இந்த படத்தின் முந்தைய நான்கு பாகங்களும் வெளியான முறையை பார்க்கும்போது அடுத்த வருடம் ஆறாம் பாகம் நிச்சயம் வெளியாகும் என்பதை கணிக்க முடிகிறது. காரணம் கடந்த 34 வருடங்களுக்கு முன்பு அதாவது 1988ல் முதல் பாகமான ஒரு சிபிஐ டைரிக்குறிப்பு வெளியாகி வெற்றி பெற்றது உடனே அடுத்த வருடமே அதன் இரண்டாம் பாகமாக 1989 ஜாக்ரத என்கிற படம் வெளியானது. ஆனால் அது முதல் பாகத்தை போல பெரிய வரவேற்பு பெறவில்லை. அதனால் மூன்றாம் பாகத்தை எடுக்கும் யோசனையை கிடப்பில் போட்டுவிட்டார்கள்.

பின்னர் 15 வருடம் கழித்து 2004-ல் இந்த படத்தின் மூன்றாம் பாகத்தை வெளியிட்டார்கள் அந்தப்படம் வெற்றி அடைந்ததும் சூட்டோடு சூடாக நான்காம் பாகத்தையும் தயாரித்து 2005-ல் வெளியிட்டார்கள் ஆனால் மூன்றாம் பாகத்திற்கு கிடைத்த வரவேற்பு நான்காம் பாகத்திற்கு கிடைக்காமல் தோல்வியை சந்தித்தது. இதனைத் தொடர்ந்து வழக்கம்போல ஐந்தாம் பாகம் என்கிற எண்ணத்தை ஒதுக்கி வைத்து விட்டனர்.

ஆனாலும் கதாசிரியர் எஸ்.என்.சுவாமியின் பிடிவாதம் காரணமாக கிட்டத்தட்ட 16 வருடங்கள் கழித்து இந்த படத்தின் ஐந்தாம் பாகத்தை இப்போது வெளியிட்டுள்ளார்கள். இந்தப்படம் வெற்றிப் பட்டியலில் சேர்ந்துள்ளதால் உடனடியாக இதன் அடுத்த பாகத்தையும் அடுத்த வருடத்தில் வெளியிடுவதற்கு சென்டிமென்ட்டாக வாய்ப்பு உள்ளது என்றும் தெரிகிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.