இந்திய பகுதியில் நுழைய முயன்ற பாகிஸ்தான் ஆளில்லா விமானம்- துப்பாக்கிச்சூடு நடத்தி விரட்டியது எல்லைப் பாதுகாப்பு படை

ஜம்மு:
ஜம்முவில் உள்ள சர்வதேச எல்லையில் இருந்து இந்திய பகுதியை நோக்கி நேற்றிரவு 7.25 மணியளவில் பாகிஸ்தானை சேர்ந்த ஆளில்லா விமானம் ( ட்ரோன்)  ஒன்று பறந்து வருவதை கண்ட எல்லைப் பாதுகாப்புப் படையினர் பல ரவுண்டுகள் துப்பாக்கிச் சூடு நடத்தியதாக அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். 
இதையடுத்து அந்த ஆளில்லா விமானம் பாகிஸ்தான் பக்கம் திரும்பி சென்றதாகவும் எனினும் அந்த விமானத்தில் இருந்து எந்த பொருளாவது வீசப்பட்டதா என்பதை உறுதிபடுத்த தீவிர தேடுதல் வேட்டை நடத்தப்பட்டதாக  ஜம்மு எல்லைப்புற பிஎஸ்எஃப் அதிகாரி ஜெனரல் எஸ்பி சந்து தெரிவித்துள்ளார். 
ஆளில்லா விமானம் பறந்து வந்த முழுப் பகுதியும் சுற்றி  வளைக்கப்பட்டு ஆய்வு செய்யப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
ஜம்மு காஷ்மீரின் சம்பா மாவட்டத்தின் சக் பகிரா பகுதியில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டிருந்த எல்லைப் பாதுகாப்பு படையினர்
எல்லை தாண்டிய நிலத்தடி சுரங்கப்பாதையை கண்டு பிடித்து அழித்தனர். 
இது நடந்து மூன்று நாட்களுக்குப் பிறகு பாகிஸ்தானில் இருந்து ஆளில்லா விமானம் ஏவப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.