இரண்டாவது திருமணம்; பெண் தர மறுத்த அண்ணனுக்கு ஸ்கெட்ச்! – வெடிகுண்டுகளுடன் சிக்கிய ரெளடிகள்

புதுச்சேரி, காராமணிக்குப்பம் ரயில்வே தண்டவாளம் அருகில் நேற்று முந்தினம் இரவு சந்தேகப்படும்படி சிலர் பதுங்கி இருக்கிறார்கள் என்று உருளையன்பேட்டை போலீஸாருக்கு ரகசிய தகவல் ஒன்று சென்றது. அதனடிப்படையில் இன்ஸ்பெக்டர் பாபுஜி, சப்-இன்ஸ்பெக்டர் சந்திரசேகரன் உள்ளிட்ட போலீஸார் உடனே அந்த இடத்திற்கு விரைந்தனர். அப்போது அங்கு பதுங்கியிருந்த 4 பேர் கொண்ட கும்பல் போலீஸாரை பார்த்ததும் தப்பியோடியது. அப்போது அவர்கள் கையிலிருந்த ஒரு நாட்டு வெடிகுண்டு கீழே விழுந்து வெடித்து சிதறியது.

கைது செய்யபபட்ட குற்றவாளிகள்

ரெயில்வே தண்டவாளத்தில் வெடித்து சிதறிய நாட்டு வெடிகுண்டின் துகள்கள் கிடந்தது. மேலும் அங்கு மற்றொரு நாட்டு வெடிகுண்டை பதுக்கி வைத்திருப்பதும் தெரியவந்தது. அதையடுத்து போலீஸார் கொடுத்த தகவலின் அடிப்படையில் அங்கு வந்த வெடிகுண்டு நிபுணர்கள் அந்த வெடிகுண்டை பத்திரமாக சேகரித்தனர். அதன்பிறகு மணல், மரத்தூள் நிரப்பி வைக்கப்பட்டு இருந்த பிளாஸ்டிக் வாளியில் நாட்டு வெடிகுண்டை வைத்து பத்திரமாக அப்புறப்படுத்தினர்.

தொடர்ந்து அங்கு வேறு ஏதாவது நாட்டு வெடிகுண்டுகள் பதுக்கி வைக்கப்பட்டுள்ளனவா என தேடுதல் வேட்டை நடத்தினர். இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்திய உருளையன்பேட்டை போலீஸார், தப்பியோடிய புதுச்சேரி கொசப்பாளையம் பகுதியைச் சேர்ந்த கஞ்சா வியாபாரியான ரெளடி ரிஷிகுமார், பெரியார் நகரை சேர்ந்த கவுதம், அரவிந்த், கவியரசன் உள்ளிட்ட 4 பேரை கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்த 3 நாட்டு வெடிகுண்டுகளையும் கைப்பற்றினர்.

குற்றவாளிகளுடன் போலீஸார்

கஞ்சா விற்பனை, அடிதடி உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய ரெளடி ரிஷிகுமாரும், ஆட்டுப்பட்டியைச் சேர்ந்த ஒரு பெண்ணும் ஏற்கெனவே காதலித்து வந்திருக்கிறார்கள். ஆனால் ரிஷிக்குமாரின் சட்டவிரோத நடவடிக்கைகளைப் பற்றி தெரிந்துகொண்ட அந்த பெண், ரிஷிகுமாரை விட்டு விலகிவிட்டார். அதன்பிறகு ரிஷிகுமாருக்கு வேறொரு பெண்ணுடன் திருமணமாகி குழந்தைகளும் இருக்கின்றனர். அதையடுத்து ஆட்டுப்பட்டியைச் சேர்ந்த அந்த பெண்ணிடம், தன்னை இரண்டாவதாக திருமணம் செய்துகொள்ளும்படி தொல்லை செய்திருக்கிறார்.

அதற்கு மறுப்பு தெரிவித்த அந்த பெண், ரிஷிகுமார் கொடுக்கும் தொல்லை குறித்து தனது அண்ணனிடம் கூறியிருக்கிறார். கடந்த சில நாள்களுக்கு முன்பு அந்த பெண்ணின் அண்ணனை சந்தித்த ரிஷிகுமார், ’உன் தங்கச்சியை எனக்கு கல்யாணம் பண்ணிக் கொடு. நான் நல்லா பாத்துக்குவேன்’ என்று கேட்டிருக்கிறார். அப்போது இருவருக்கும் ஏற்பட்ட தகராறில் ரிஷிகுமாரை கத்தியால் வெட்டியிருக்கிறார் அந்த பெண்ணின் அண்ணன். அதில் தலையில் காயம் ஏற்பட்டதால் அங்கிருந்து ரிஷிகுமார் தப்பித்து ஓடிவிட்டார்.

இந்நிலையில் திருப்பூரில் வேலை செய்துகொண்டிருந்த ரிஷிகுமாரின் நண்பர் வீரா என்பவர் புதுச்சேரிக்கு வந்திருக்கிறார். அப்போது வீரா மற்றும் நண்பர்கள் இணைந்து அந்த பெண்ணின் அண்ணனை கொலை செய்ய திட்டம் தீட்டியிருக்கிறார்கள். அதன்படி புதுவை வனத்துறை பின்புறம் இருக்கும் புதர் மறைவில் 5 நாட்டு வெடிகுண்டுகளை தயாரித்திருக்கின்றனர். அதன்பிறகு 3 குண்டுகளை அங்கேயே பதுக்கி வைத்துவிட்டு, இரண்டு குண்டுகளை மட்டும் கையில் எடுத்துக்கொண்டு தங்கள் திட்டத்தை அரங்கேற்றச் சென்றிருக்கின்றனர். அப்போதுதான் போலீஸார் அவர்களை மடக்கிப் பிடித்திருக்கிறார்கள். மேலும் தப்பித்து தலைமறைவாக இருக்கும் வீரா என்பவரையும் தேடி வருகின்றனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.