ஊட்டி கோடை விழா முழு விவரம்: கோத்தகிரியில் 11-வது காய்கறி கண்காட்சி இன்று தொடங்கியது

நீலகிரி: கொரோனா தொற்று காரணமாக கடந்த இரு ஆண்டுகளாக நடைபெறாமல் இருந்த ஊட்டி கோடை விழா இந்தாண்டு விமரிசையாக கொண்டாடப்படுகிறது. கோடை விழாவின் முதல் நிகழ்ச்சியாக இன்று காய்கறி கண்காட்சி கோத்தகிரியில் தொடங்கி உள்ளது.

நீலகிரி மாவட்டத்திற்கு வருகை புரியும் சுற்றுலாப்பயணிகளுக்கு தமிழ்நாட்டின் கலை மற்றும் கலாசாரத்தை வெளிப்படுத்தும் வகையிலும், அவா்களை மகிழ்விக்கும் வகையிலும் இந்த விழா நடத்தப்படுகிறது. நீலகிரி மாவட்டத்தில் ஒவ்வொரு ஆண்டும் கோடை விழா மே மாதத்தில் மாவட்ட நிா்வாகம், சுற்றுலாத்துறை, தோட்டக் கலைத்துறை மற்றும் பிற துறைகளை இணைத்து நடத்தப்பட்டு வருகிறது.

கோடை விழாவின் முதல் நிகழ்ச்சியாக கோத்தகிரியில் இன்றுகாய்கறி கண்காட்சி துவங்கியது. இந்த கண்காட்சியானது,இயற்கை விவசாயத்தை ஊக்குவிக்கவும், மலைத்தோட்ட காய்கறி விவசாயிகளின் வாழ்வாதரம் மேம்படவும் நடத்தப்பட்டு வருகிறது.

நீலகிரி மாவட்ட ஆட்சியர் 11-வது காய்கறி கண்காட்சியை  கோத்தகிரியில் உள்ள நேரு பூங்காவில்  இன்று தொடங்கி வைத்தார். இந்த கண்காட்சி இன்று, நாளை (மே 7,8) இரு நாட்கள் மட்டுமே நடைபெறும். இந்த கண்காட்சியில் தமிழகத்தில் உள்ள கோவை, திருவண்ண்மலை, தர்மபுரி, திண்டுக்கல், தேனி, திண்டுக்கல், காஞ்சிபுரம், விழுப்புரம், கள்ளக்குறிச்சி போன்ற பகுதிகளில் இருந்து வருகை தந்திருந்த தோட்டக்கலை துறையினர் சார்பில் கத்தரிக்காய், பூசனிக்காய், கேரட், பீட்ரூட், கேரட், குடைமிளகாய் போன்ற காய்கறிகளைக் கொண்டு யானை, மயில், கிளி, சேவல், பான்டா கரடி, வரி குதிரை, மீன் போன்றவை காண்பவர்கள் கண்களுக்கு விருந்தாக அமைக்கப்பட்டு உள்ளது.

மேலும்,  பல்வேறு காய்கறிகளால் உருவான 12 அடி உயர, 7 அடி நீளம், 3 அடி அகலம் கொண்ட பிரமாண்ட ஒட்டக சிவிங்கியும், 7அடி உயரம், 5அடி நீளம், 2 அடி அகலம் கொண்ட ஒட்டக சிவிங்கியின் குட்டி 1500 கிலோ கேரட் மற்றும் முள்ளங்கியால் உருவாக்கப்பட்டுள்ளது. உதகை 200 சுயபடம் எடுக்கும் காய்கறிகளால் அலங்கரிக்கப்பட்ட சிற்பம் வைக்கபபட்டு உள்ளது.

காய்கறி கண்காட்சியை காண ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்து வருகின்றனர்.  கடந்து இரண்டு ஆண்டுகளாக கோடை விழா நடைபெறாத நிலையில், இந்த ஆண்டு, முதல் நிகழ்ச்சி களைகட்டி வருகிறது.

இதைத்தாடர்ந்து, மே 7-ந்தேதி முதல் 31-ந்தேதி வரையில் ஊட்டியில் புகைப்படக் கண்காட்சி நடைபெறுகிறது. சேரிங்கிராஸில் உள்ள தோட்டக்கலைத்துறை அரங்கில் நீலகிரி மாவட்ட வனத்துறை மூலம் நடத்தப்படுகிறது.

நீலகிரி மாவட்டத்தின் இயற்கை எழில், வனவிலங்குகள் மற்றும் பாரம்பரிய கட்டிடம் போன்ற சிறப்புமிகு வண்ண புகைப்படங்கள் சுற்றுலாப்பயணிகளின் பாா்வைக்காக இக்கண்காட்சியில் இடம்பெறும்.

இதையடுத்து 13, 14 மற்றும் 15-ந்தேதிகளில் கூடலூரில் கோடை விழாவுடன் வாசனை திரவிய கண்காட்சியும், 14 மற்றும் 15 ஆகிய நாட்களில் ஊட்டியில் அரசினா் ரோஜா பூங்காவில் ரோஜா மலா்கண்காட்சியும் நடக்கிறது.

கோடைவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான ஊட்டி மலா்க்கண்காட்சி 20-ந்தேதி முதல் 24-ந்தேதி வரை ஊட்டி அரசினா் தாவரவியல் பூங்காவில் நடைபெற உள்ளது. 28 மற்றும் 29 ஆகிய நாட்களில் குன்னூா் சிம்ஸ் பூங்காவில் பழக்காட்சியும் நடைபெறுகிறது.

கோடைவிழாவில் பரதநாட்டியம், கிராமிய கலைகள், இன்னிசை நிகழ்ச்சிகள் போன்ற பல்வேறு கலைநிகழ்ச்சிகள் 18-ந்தேதி முதல் 24-ந்தேதி வரை பழங்குடியினா் கலாச்சார மையத்திலும், 25-ந்தேதி முதல் 31-ந்தேதி வரை அரசினா் தாவரவியல் பூங்காவிலும், 18-ந் தேதி முதல் 31-ந் தேதி வரை ஊட்டி படகு இல்லத்திலும் நடைபெறும். சுற்றுலா பயணிகள் அங்கு சென்று நிகழ்ச்சிகளை கண்டுகளிக்கலாம்.

தொடர்ந்து, 18-ந் தேதி முதல் 31-ந் தேதி வரை மகளிா் சுய உதவிக்குழு, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளா்ச்சித் திட்டம், ஆவின், இன்கோசா்வ், டான்டீ போன்றவற்றின் பொருட்காட்சி ஊட்டி பழங்குடியினா் கலாச்சார மைய தரை தளத்தில் நடைபெறவுள்ளது.

கோடைவிழாவின் சிறப்பு நிகழ்ச்சிகளான படகுப்போட்டி 19-ந்தேதி ஊட்டி ஏரியில் நடக்கிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.