சண்டிகர்,-பஞ்சாபில் உள்ள ஒரு சிறையில், கைதிகளுக்கு எலுமிச்சம் பழங்களை வாங்கியதாக, போலி கணக்கு காட்டிய சிறை கண்காணிப்பாளர், ‘சஸ்பெண்ட்’ செய்யப்பட்டுள்ளார்.
பஞ்சாபில், முதல்வர் பகவந்த் மான் தலைமையில், ஆம் ஆத்மி ஆட்சி நடக்கிறது. இங்கு கபுர்தலா மாவட்டத்தில் உள்ள ஒரு சிறையில், கண்காணிப்பாளராக இருந்தவர் குர்னம் லால். இவர், சிறைக் கைதிகளுக்கு தேவையான உணவுப் பொருட்களை வாங்குவது உள்ளிட்ட பணிகளில் ஈடுபட்டு வந்தார்.சமீபத்தில், சிறைக் கைதிகளுக்காக, 50 கிலோ எலுமிச்சம் பழங்களை வாங்கியதாக கூறி கணக்கு காட்டி உள்ளார். அவர் வாங்கியதாக கூறப்படும் எலுமிச்சம் பழங்கள், கைதிகளுக்கு வழங்கப்படவில்லை.
கடந்த மாதம், 1 கிலோ எலுமிச்சம் பழம், 200 ரூபாய்க்கு விற்ற போது, அவற்றை வாங்கியதாக கணக்கில் காட்டி உள்ளார்.இது குறித்து விசாரணை நடத்த, மாநில சிறைத் துறை அமைச்சர் ஹர்ஜோத் சிங் பைன்ஸ் உத்தரவிட்டார். விசாரணையில், காய்கறிகள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் வாங்கியதில், பல்வேறு முறைகேடுகள் நடந்து இருப்பது அம்பலமானது.இந்நிலையில், குற்றஞ்சாட்டப்பட்ட சிறை கண்காணிப்பாளர் குர்னம் லால், சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
Advertisement