கட்டுப்பாடுகளுக்கு எதிர்ப்பு சீன அதிபர் கடும் எச்சரிக்கை| Dinamalar

பீஜிங்:கொரோனா பரவலை தடுக்க ஷாங்காய் நகரில் விதிக்கப்பட்டுள்ள கடும் கட்டுப்பாடுகளுக்கு மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், சீன அதிபர் ஷீ ஜிங்பிங் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
நம் அண்டை நாடான சீனாவில், கொரோனா பரவல் தீவிரமடைந்துள்ளது. குறிப்பாக ஷாங்காய் நகரில் பாதிப்பு அதிகமாக உள்ளது. இதையடுத்து அங்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளன.இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஷாங்காய் மக்கள், சமூக வலை தளங்களில் எதிர்ப்பு கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர்.

அதிர்ச்சி

வீட்டு ஜன்னல் வழியாக பாத்திரங்களை தட்டி அரசின் கட்டுப்பாடுகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். சில இடங்களில், போலீஸ் மற்றும் சுகாதாரத் துறை ஊழியர்களுடன் மக்கள் மோதலில் ஈடுபட்டுள்ளனர்.எதிர்ப்பாளர்கள் கடுமையாக கட்டுப்படுத்தப்படும் சீனாவில், இந்த திடீர் எதிர்ப்பு குரல், சீன அரசுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், கொரோனா பரவல் தடுப்பு குறித்து, ஆளும் சீன கம்யூனிஸ்ட் கட்சியின் உயர்நிலை குழுவின் கூட்டம் நடந்தது. இதில், கொரோனா பரவலைத் தடுப்பதற்கு எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து விளக்கப்பட்டது.
இக்கூட்டத்தில் பேசிய ஜிங்பிங், ”கொரோனாவை தடுக்க அரசு சரியான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. ”அரசின் கொள்கைகளுக்கு எதிராக சந்தேகம் எழுப்புவது, ஏற்க மறுப்பது, விமர்சித்து கருத்து வெளியிடுவது போன்றவை ஒடுக்கப்படும்,” என, ஆவேசமாக கூறியுள்ளார்.

சீனாவில் கொரோனா பரவல் துவங்கியதில் இருந்து இவ்வளவு ஆவேசமாக ஜிங்பிங் பேசியதில்லை. முதல் முறையாக அவர் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

பொருளாதாரம் பாதிப்பு

நாட்டின் வர்த்தக மையமான ஷாங்காய் முடக்கப்பட்டுள்ளதால், பொருளாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.உரிய உணவு, மருத்துவ வசதிகள் கிடைக்கவில்லை என, மக்கள் கூறி வருகின்றனர். இதற்கிடையே அரசின் கட்டுப்பாடுகளுக்கு, ஆளும் கட்சியியே சிலர் அதிருப்தியில் உள்ளதாக கூறப்படுகிறது. இதனால் தான் சீன அதிபர் இவ்வளவு ஆவேசமாக பேசியதாக கூறப்படுகிறது.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.