சட்டப்பூர்வ வயதை எட்டுமுன்னே 25 சதவீத பெண்களுக்கு திருமணம்- குடும்ப நல ஆய்வறிக்கையில் தகவல்

புதுடெல்லி:

இந்தியாவில் 18 முதல் 29 வயது வரையிலான பெண்களில் 25 சதவீதத்தினர் சட்டப்பூர்வ வயதை எட்டுமுன்னே திருமணம் செய்து கொண்டிருப்பது தெரியவந்துள்ளது. இதைப்போல 1 சதவீத பெண்கள் மது அருந்துவதாகவும் தேசிய குடும்ப நல ஆய்வறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.

நாடு முழுவதும் 707 மாவட்டங்களில் 6.37 லட்சம் குடும்பத்தினரிடம் தேசிய குடும்ப நலத்துறை சார்பில் பல்வேறு அம்சங்கள் தொடர்பாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. கடந்த 2019-21-ம் ஆண்டுகளில் நடத்தப்பட்ட இந்த 5-வது ஆய்வு தொடர்பான அறிக்கை வெளியிடப்பட்டு உள்ளது.

இதில் முக்கியமாக, சட்டப்பூர்வ வயதை எட்டுவதற்கு முன் திருமணம் செய்தவர்கள் தொடர்பாக ஆய்வு நடத்தப்பட்டது. இதில் 18-29 வயதுடைய பெண்களில் 25 சதவீதத்தினரும், 21-29 வயதுடைய ஆண்களில் 15 சதவீதம் பேரும் முன்கூட்டியே திருமணம் செய்திருப்பதாக தெரிவித்துள்ளனர்.

பெண்களில் அதிகபட்சமாக மேற்கு வங்காளத்தில் 42 சதவீதம் பேரும், பீகாரில் 40 சதவீதம் பேரும் முன்கூட்டியே திருமணம் செய்துள்ளனர்.

ஆண்களை பொறுத்தவரை பீகாரில் அதிகபட்சமாக 25 சதவீதத்தினரும், குஜராத், ராஜஸ்தான் மற்றும் மத்தியபிரதேசத்தில் தலா 24 சதவீதத்தினரும் முன்கூட்டியே திருமணம் செய்து கொண்டிருப்பதாக அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.

இந்த பட்டியலில் லட்சத்தீவு, சண்டிகர் மற்றும் கேரளா தலா 1 சதவீதத்துடன் கடைசி இடத்திலும், புதுச்சேரி, தமிழகம், நாகாலாந்து ஆகியவை தலா 4 சதவீதத்துடன் அதற்கு முந்தைய இடத்திலும் உள்ளன. எனினும் நாடு முழுவதும் இந்த முன்கூட்டிய திருமணங்கள் படிப்படியாக குறைந்து வருவதாகவும் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டு உள்ளது.

இந்தியாவில் பெண்களின் திருமண வயது 18 ஆகவும், ஆண்களின் திருமண வயது 21 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. தற்போது பெண்களின் திருமண வயதையும் 21 ஆக உயர்த்த பரிசீலிக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

இதைப்போல மது அருந்துவோர் தொடர்பாக நடத்தப்பட்ட ஆய்வில் நாடு முழுவதும் 22 சதவீத ஆண்கள் மது அருந்துவதாக தெரியவந்துள்ளது. இவர்களில் 15 சதவீதத்தினர் தினந்தோறும் என்ற வகையிலும், 43 சதவீதத்தினர் வாரத்துக்கு ஒருமுறையும் மது அருந்துகிறார்கள்.

இதைப்போல 1 சதவீத பெண்களும் மது அருந்துவது கண்டுபிடிக்கப்பட்டு இருக்கிறது. அவர்களில் 17 சதவீதம் பேர் தினமும் அருந்துவதாகவும், 37 சதவீதத்தினர் வாரத்துக்கு ஒரு முறை குடிப்பதும் கண்டுபிடிக்கப்பட்டு இருக்கிறது. மது அருந்தும் பெண்களில் அதிகபட்சமாக அருணாசல பிரதேசத்தில் 15 சதவீதத்தினரும், சிக்கிமில் 15 சதவீதத்தினரும் உள்ளனர்.

ஆண்களில் கோவா (59 சதவீதம்), அருணாசல பிரதேசம் (57 சதவீதம் மற்றும் தெலுங்கானா (50 சதவீதம்) மாநிலங்கள் முன்னணியில் உள்ளன. இதைத்தவிர 15 முதல் 49 வயது வரையிலான ஆண்களில் 39 சதவீதத்தினரும், பெண்களில் 4 சதவீதத்தினரும் புகையிலை பொருட்களை பயன்படுத்துவதாக தெரியவந்துள்ளது.

ஆண்கள் பயன்படுத்தும் புகையிலை பொருட்களை பொறுத்தவரை பெரும்பாலும் பான் மசாலா அல்லது குட்காவே (15 சதவீதம்) உள்ளன. அடுத்ததாக சிகரெட் (13 சதவீதம்) அதிக பயன்பாட்டில் உள்ளது. பெண்களை பொறுத்தவரை அதிகமாக பான் மசாலா அல்லது குட்காவும், அடுத்ததாக புகையிலையுடன் பான் மசாலாவும் பயன்படுத்துவதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.