புதுடெல்லி: பாஜக யுவ மோர்ச்சா பிரிவின் தேசிய செயலாளர் தஜிந்தர் பாகா. டெல்லியில் வசிக்கிறார். இந்நிலையில், ஆம் ஆத்மியை சேர்ந்த சன்னி சிங் அளித்த புகாரில், மார்ச் மாதம் நடந்த பாஜக பொதுக் கூட்டத்தில் பேசிய தஜிந்தர் பக்கா, டெல்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவாலுக்கு கொலை மிரட்டல் விடுத்தார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்திருந்தார். இதைத் தொடர்ந்து பஞ்சாப் போலீஸார் நேற்று டெல்லியில் தஜிந்தரை அவரது வீட்டில் கைது செய்து அழைத்து சென்றனர்.
மத விரோதத்தை ஊக்குவித்தல், கொலை மிரட்டல் ஆகிய குற்றசாட்டுகளின் கீழ் அவர் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, தஜிந்தரை டெல்லியில் இருந்து மொஹாலிக்கு போலீஸார் காரில் அழைத்து சென்றனர். இதனிடையே தஜிந்தர் தந்தை டெல்லி போலீஸில் புகார் செய்தார். அதில் தனது மகனை பஞ்சாப் போலீஸார் கடத்தி சென்றதாகவும், அவரை மீட்டுத் தரும்படியும் கூறியுள்ளார். இது தொடர்பாக டெல்லி போலீஸார் வழக்கு பதிவு செய்தனர்.
இதனிடையே தஜிந்தரை பஞ்சாப் போலீஸார் மொஹாலிக்கு அழைத்து செல்லும் வழியில் ஹரியாணா மாநில போலீஸார் அவர்களை தடுத்தனர். தஜிந்தர் கடத்தப்பட்டதாக டெல்லியில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது தொடர்பாக ஹரியாணா போலீஸார் பஞ்சாப் போலீஸாரிடம் விசாரணை நடத்தினர். அப்போது டெல்லி போலீஸாரும் அங்கு வந்து சேர்ந்தனர். அங்கு 3 மாநில போலீஸாரும் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இச்சம்பவம் டெல்லி, பஞ்சாப், ஹரியாணாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. நீண்ட விவாதங்களுக்குப் பின்னர், ஹரியாணாவின் குரு ஷேத்ரா பகுதியில் டெல்லி போலீஸாரிடம், தஜிந்தர் பக்கா ஒப்படைக்கப்பட்டார்.